ஒன்னும் பிடிக்கல.. சினிமாவை விட்டு போறேன்!.. மிஷ்கினுக்கு என்னாச்சி?!....

Director Mysskin: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கோணத்தில் கதை சொல்லும் இயக்குனர் மிஷ்கின். நிறைய நாவல்களை படித்த அறிவாளி இவர். சித்திரம் பேசுதடி படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிக்க வைத்தார். இந்த படம் ஹிட் அடிக்கவே அஞ்சாதே இயக்கினார். இந்த படத்திலேயே மிஷ்கின் என்ன மாதிரியான இயக்குனர் என்பது ரசிகர்களுக்கு புரிந்தது.
வசனங்கள் எதுவுமில்லாமல் கோமரா கோணங்களிலேயே கதை சொல்வார். ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசோவாவின் தீவிர ரசிகர் இவர். அவரின் படங்களை பார்த்து வளர்ந்தவர் என்பதால் அந்த தாக்கம் இவரின் படங்களில் நிறையவே இருக்கும். குரோசோவின் படங்களில் ஒரு கதாபாத்திரம் எப்போதும் கத்திக்கொண்டே பேசும். நந்தலாலா படத்தில் இதை அப்படியே செய்திருப்பார் மிஷ்கின்.
யாரும் கற்பனையே செய்து பார்க்க முடியாத படி சாதாரண நடிகர்களை வேறுமாதிரி நடிக்க வைப்பார். அஞ்சாதே படத்தில் பாண்டியராஜனுக்கு வில்லன் வேடம், இயக்குனர் அமீருக்கு ஒரு நடனம், இயக்குனர் சேரனை வைத்து யுத்தம் செய் என ரிஸ்க் எடுப்பார். ஒநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைகோ போன்ற படங்களை இயக்கினார்.
ஒருகட்டத்தில் நடிகராக மாறினார். இப்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பிசாசு 2, டிரெய்ன் ஆகிய படங்களை இயக்கி முடித்திருக்கிறார். ஆனால், அந்த படங்கள் இன்னமும் வெளியாகவில்லை. சினிமா விழாக்களில் மனக்கட்டுப்பாடு இன்றி வாய்க்கு வந்ததை பேசி சர்ச்சையில் சிக்குவார். அவர் அன்பின் வெளிப்பாடாக பேசினாலும் பார்ப்பவர்களுக்கு ஏதோ அவர் திமிறாக பேசுவது போலவே தெரியும்.
சில சமயம் கெட்டவார்த்தைகளையும் பேசிவிடுவார். ஒருமுறை இளையராஜாவை ‘அவன்’ என சொல்ல அது பெரிய சர்ச்சையானது. அதற்காக மன்னிப்பும் கேட்டார். அப்போதே நான் சினிமாவை விட்டு சீக்கிரம் போகப்போகிறேன் என சொன்னார். இந்நிலையில், இயக்குன ராமின் ‘பறந்து போ’ பட விழாவில் பேசிய மிஷ்கின் ‘நான் சினிமாவில் சந்தோஷமாக இல்லை. சீக்கிரமே சினிமாவை விட்டு போக நினைக்கிறேன். இயக்குனர் ராமின் படங்கள்தான் எனக்கு ஆறுதலாக இருக்கிறது. அவரது படங்கள் எனக்கு உலக அதிசயம் மாதிரி’ என பேசியிருக்கிறார்.