மீண்டும் டைம் டிராவலை கையிலெடுக்கும் வெங்கட் பிரபு!.. எஸ்.கே.வுக்கு ஜோடி யார் தெரியுமா?...

Sivakarthikeyan: கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் அமரன் படம் 300 கோடி வரை வசூல் செய்துவிட்டதால் தனது சம்பளத்தை 70 கோடியாக ஏற்றிவிட்டார். இவரை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்களும் ஆசைப்படுகிறார்கள்.
அமரன் படத்திற்கு முன்பே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார். பாதி படம் முடிந்த நிலையில் முருகதாஸுக்கு சல்மான்கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு வந்ததால் மதராஸி படத்தை விட்டுவிட்டு அந்த படத்தை இயக்கப்போனார். எனவே, அமரன் படத்தில் நடிக்கப்போனார் சிவகார்த்திகேயன்.
அந்த படம் ஹிட் அடித்தவுடன் சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடிக்கப்போனார். இது 1960களில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை. ஷூட்டிங் வேகமாக நடந்தநிலையில் அமலாக்கத்துறை ரெய்டில் இப்படத்தின் தயாரிப்பாளர் சிக்கினார். எனவே, பராசக்தி ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
எனவே, முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடிக்கப்போனார் சிவகார்த்திகேயன். தற்போது பராசக்தி படத்திற்கு வந்த பிரச்சனை சரியாகி இன்னும் 2 வாரங்களில் படப்பிடிப்பை துவங்கவிருக்கிறார்கள். ஒருபக்கம், சிவகார்த்திகேயனை வைத்து வெங்கட் பிரபு ஒரு படம் இயக்கவுள்ளார். கோட் படம் முடிந்ததில் இருந்து சிவகார்த்திகேயனை ஃபாலோ செய்து ஒருவழியாக சம்மதம் வாங்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய 2 படங்களையும் முடித்துவிட்டு அடுத்து குட் நைட் பட இயக்குனரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
அந்த படம் முடிந்தபின்னரே வெங்கட்பிரபு படம் துவங்கும் என்கிறார்கள். அதோடு, மாநாடு படம் போல இந்த படத்திலும் ‘டைம் டிராவல்’ கதையை கையில் எடுத்திருக்கிறாராம். அதோடு, இந்த படத்தில் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளாராம். மேலும், இந்த படத்தில் 2 கதாநாயகிகள் என்பதால் டிராகன் பட புகழ் கயாடு லோஹரிடமும் பேசி வருகிறார்களாம்.