கைதி 2-வுக்கு பின் லோகேஷ் இயக்கும் அந்த படம்!.. அட்லி மாதிரி ஹிட் கொடுப்பாரா?!...

Lokesh Kanagaraj: மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ. வங்கியில் வேலை செய்து கொண்டிருந்த லோகேஷ் சினிமாவில் நுழைய ஆசைப்பட்டு குறும்படங்களை இயக்கினார். அதன்பின் சினிமாவுக்கான ஒரு கதையை உருவாக்கினார். அப்படி வெளியான மாநகரம் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோடு பல இயக்குனர்களின் பாராட்டையும் பெற்றது.
அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படம் எடுத்தார். மாநகரம் போலவே ஒரே இரவில் கதை நடப்பது போல திரைக்கதை அமைத்து அசத்தியிருந்தார். அதுவரை கார்த்தியை யாரும் அப்படி பார்த்தது இல்லை. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியோ, பாடல்களோ இல்லை. ஆனாலும் படம் ஹிட் அடித்தது. எனவே, லோகேஷ் கவனிக்கப்பட்டார்.
அடுத்து விஜயை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம், மீண்டும் விஜயை வைத்து லியோ போன்ற படங்களை இயக்கினார். எல்லாமே ஹிட் அடித்தது. லோகேஷின் படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் அவரின் அடுத்த படத்திலும் வருவதை ரசிகர்கள் LCU என அழைக்கிறார்கள்.
லோகேஷ் படங்களுக்காகவே ரசிகர்களும் உருவானார்கள். அவர் இயக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்பும் அதிகரிக்க துவங்கியது. இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
அடுத்து கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ். லியோ 2, மாஸ்டர் 2 போன்றவற்றை எடுக்கும் ஆசை இருக்கிறது. ஆனால், விஜய் சார் இல்லாமல் எடுக்க முடியாது என சொல்லியிருக்கிறார். அதேபோல், சூர்யாவை வைத்து ரோலக்ஸ் படத்தை இயக்கும் எண்ணமும் லோகேஷுக்கு இருக்கிறது.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமீர்கானை வைத்து லோகேஷ் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இது சூர்யாவிடம் ஏற்கனவே லோகேஷ் சொன்ன இரும்புக்கை மாயாவி கதை என சொல்லப்படுகிறது. இதில், சூர்யா ஏன் நடிக்கவில்லை என்பது தெரியவில்லை. அமீர்கானை வைத்து லோகேஷ் இயக்கும் படம் கைதி 2-வுக்கு பின் துவங்கும் என சொல்லப்படுகிறது. ஷாருக்கானை வைத்து அட்லி ஜவான் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தது போல லோகேஷும் ஹிட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.