எம்.ஆர்.ராதா சொன்னத வச்சி எம்.ஜி.ஆரை கலாய்த்த சந்திரபாபு!.. தலைக்கு தில்லு அதிகம்தான்!…

mgr
நடிகர் எம்.ஆர்.ராதா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ரத்தக்கண்ணீர். பெண்களிடம் மோகம் கொண்டு, மனைவியை மறந்து, பின் தொழு நோயாளியாகவும் மாறி ரசிகர்களை தனது நடிப்பால் அசத்தியிருப்பார் எம்.ஆர்.ராதா. இந்த படத்தில் காமெடி நடிகர் சந்திரபாபுவும் நடித்திருப்பார். ஒரு காட்சியில் அவர் கீழே விழுவது போல் காட்சி எடுக்கப்பட்டது. அப்போது சந்திரபாபு உண்மையாகவே கீழே விழுந்து விழுந்து நடித்துள்ளார்.

இதைப்பார்த்த எம்.ஆர்.ராதா அவரை அழைத்து ‘பாபு சினிமாவில் நடிக்க வேண்டுமே தவிர உண்மையாக எதையும் செய்யக்கூடாது. இந்த படத்தில் குஷ்டரோகியாக நடிக்கிறேன். அதற்காக நான் குஷ்ட நோயாளியாக மாற வேண்டுமா என்ன?. சினிமா என்பது இருப்பது போல் ஆனால் இல்லாத உலகம். சிரிப்பது போல், அழுவது போல், சாவது போல் எல்லாமே நடிப்புதான். விழுவது போல் நடிக்க வேண்டும். உண்மையாக விழக்கூடாது. உன் உடம்பை பார்த்துக்கொள்’ என அறிவுரை சொல்லியிருக்கிறார்.

சில மாதங்கள் கழித்து எம்.ஜி.ஆருடன் குலோபகாவலி படத்தில் சந்திரபாபு நடித்தார். அந்த படத்தில் ஒரு காட்சியில் புலியுடன் எம்.ஜி.ஆர் சண்டை போடும் காட்சியை எடுக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டு வந்தது. அதற்காக உண்மையான புலியும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
இதைக்கண்ட சந்திரபாபு எம்.ஜி.ஆரிடம் சென்று ‘சினிமாவில் எல்லாமே நடிப்புதான் என எம்.ஆர்.ராதா அண்ணன் என்னிடம் சொன்னார். நீங்கள் நிஜ புலியிடம் சண்டை போட போகிறீர்கள். இது தேவையா?’ எனக்கேட்டாராம். அப்போது அங்கு வந்த புலியின் பயிற்சியாளர் சந்திரபாபுவிடம் ‘பயப்பட வேண்டாம். அண்ணனுக்கு புலியை பற்றிய எல்லா விஷயங்களும் தெரியும்’ என்றாராம். அதற்கு சந்திரபாபு ‘இவருக்கு தெரியும். ஆனால், புலிக்கு இவரை பற்றி எதுவும் தெரியாது. அதுதான் என்னுடைய பயம்’ என்றாராம். இதைக்கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர் ‘பயப்பட வேண்டாம் பாபு.. நான் எப்படி செய்கிறேன் என பாருங்கள்’ என சொல்லிவிட்டு சென்று அந்த காட்சியில் நடித்தாராம்.
படம் வெளியான போது அந்த காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.