இயக்குனரிடம் ஒரு மாசம் பேசாமல் இருந்த விஜய்!.. கில்லி ஷூட்டிங்கில் நடந்த அந்த சம்பவம்!.

விஜயின் கேரியரில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த படம்தான் கில்லி. 2004ம் வருடம் வெளியான இப்படத்திற்கு முன் விஜய் பல படங்களில் நடித்திருந்தாலும் கில்லி படத்தின் வெற்றி அவரை வசூல் மன்னனாக மாற்றியது. இப்படம்தான் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களுக்கு விஜய் மீது அபார நம்பிக்கை வர முக்கிய காரணமாக இருந்தது.

தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து ஹிட் அடித்த ஓக்கடு படத்தின் ரிமேக்தான் இந்த கில்லி. ஆனால், படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து இப்படத்தை உருவாக்கினார் இயக்குனர் தரணி. படம் பார்த்த பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் தெலுங்கை விட தமிழ் வெர்சன் நன்றாக இருப்பதாக பாராட்டினார்கள்.

இதையும் படிங்க: அந்த எபெக்ட் இல்லாமலேயே கங்குவா படத்தைப் பார்த்து பிரமித்துப் போன தயாரிப்பாளர்… படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?

அவ்வளவு ஏன். ஓக்கடு படத்தின் ஹீரோவான மகேஷ் பாபுவே ஓக்கடுவை விட கில்லி நன்றாக இருந்ததாக ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். கில்லி படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மதுரை முத்துப்பாண்டியாக பிரகாஷ்ராஜ் கலக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பிரகாஷ்ராஜின் நடிப்புதான்.

அதோடு, வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். குறிப்பாக ‘அப்படிப்போடு போடு’ பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது. 20 வருடங்களுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இப்படம் 20 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மற்றும் இயக்குனர் தரணி ஆகியோர் விஜயை நேரில் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

dharani

கில்லி படத்தில் விஜயின் நண்பர்களாக நாகேஷ் பிரசாத், தாமு, மயில்சாமி, சாப்ளின் பாலு, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சாப்ளின் பாலு கில்லி படத்தில் விஜயுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது ‘இப்படம் துவங்கி ஒரு மாதம் விஜயும், தரணியும் பேசிக்கொள்ளவே இல்லை. ஏனெனில், விஜய் அடிப்படையாகவே கூச்ச சுபாவம் உடையவர். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். ஒருநாள் என்னிடம் ‘என்னடா இப்படியே போய்ட்டிருக்கு’ என கேட்க ‘எல்லாம் சரி ஆகிடும்’ என சொன்னேன். சில நாட்களில் ‘விஜய்’ என்று தரணி குரல் கொடுத்தால் ‘அண்ணே’ என்று ஓடினார் விஜய். அந்த அளவுக்கு இருவரும் நெருக்கமாகிவிட்டனர்’ என சாப்ளின் பாலு சொல்லி இருந்தார்.

 

Related Articles

Next Story