
சேது திரைப்படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகர் விக்ரம். அந்த படத்திற்கு முன்பே அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அது அவருக்கு கை கொடுக்கவில்லை. அதேநேரம் சேது திரைப்படம் அவருக்கு ரசிகர்களை உருவாக்கியது. அதன்பின் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சீயான் விக்ரம் மாறினார்.. அவர் நடிப்பில் வெளிவந்த தில், தூள், சாமி போன்ற படங்கள் வசூலை அள்ளியது..
அதேநேரம் கடந்த பல வருடங்களாகவே விக்ரமுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை.. அவர் கடைசியாக எப்போது ஹிட் படம் கொடுத்தார் என்பது ரசிகர்களுக்கே மறந்து விட்டது. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2025ம் வருடம் மார்ச் மாதம் வெளியான வீர தீர சூரன் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. அதேபோல், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான் படத்தில் விக்ரம் சிறப்பாக நடித்திருந்தும் படம் ரசிகர்களுக்கு புரியவில்லை. அதன்பின் இப்போது வரை விக்ரமின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை..
இந்நிலையில், தனது இஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சியான் விக்ரம் ‘சில நேரங்களில் அமைதி என்பது நம்மை தயார்படுத்திக்கொள்ளும் காலம்.. என்னை ஈர்க்கும் கதைகள் வருவதற்காக நான் ஒரு வருடம் காத்திருந்தேன்.. நான் மிகவும் மதிக்கும் இயக்குனர்களுடன் நான்கு படங்களில் நடிக்கவுள்ளேன்.. அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட கதைகள்’ என கூறியிருக்கிறார்..