Categories: Cinema News latest news

அவர் முடிவு பண்ணிட்டா முடிக்காம விடமாட்டாரு!.. அஜித் குறித்து ஓபனாக பேசிய அருண் விஜய்!..

நடிகர் அருண் விஜய்: தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வரக்கூடியவர் நடிகர் அருண் விஜய். தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்திருந்தாலும் முன்னணி நடிகர்கள் என்கின்ற இடத்திற்கு இவரால் வர முடியவில்லை. இருப்பினும் தன்னை ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்.

தமிழில் முதன்முறையாக முறை மாப்பிள்ளை என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான அருண் விஜய், அதனை தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய ஹிட் என்று எந்த திரைப்படமும் அமையாததால் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்.

அதிலும் நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகராக மாறி இருக்கும் அருண் விஜய்க்கு தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

இந்த திரைப்படத்தை முதலில் இயக்குனர் பாலா சூர்யாவை வைத்து எடுத்து வந்த நிலையில் பின்னர் சூர்யா சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலகினார். அதனை தொடர்ந்து நடிகர் அருண் விஜய்க்கு இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில் நிச்சயம் இப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும் எனவும் அருண் விஜய்க்கு மிகச்சிறந்த பெயரை பெற்று கொடுக்கும் என்று கூறப்படுகின்றது.

படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சிறிது நாட்களை இருப்பதால் படக்குழுவினர் தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களாக இயக்குனர் பாலா பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் தனது வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது நடிகர் அருண் விஜய் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் பேசிய அருண் விஜய் நடிகர் அஜித் குறித்து பெருமையாக பேசி இருந்தார். ‘என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எனக்கும் அஜித்துக்கும் ஒரு மிகப்பெரிய நட்பு உண்டானது. அந்த சமயத்தில் இருந்தே அவரை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அவர் எதையும் தீவிரமாக செய்யக்கூடிய ஒரு நபர். ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று அவர் முடிவெடுத்துவிட்டால் அதற்காக எந்த எல்லை வரையும் சென்று அதை முடித்து காட்டுவார்.

என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு அவரை சந்தித்து பல வருடங்கள் ஆனது. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவரை சந்தித்தேன். அப்போது நான் பாலாவுடன் இணைந்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருவதை கூறினேன். அதை கேட்டு மிகுந்த உற்சாகத்துடன் என்னை வாழ்த்தினார். மேலும் அவரது மனைவி ஷாலினியை அழைத்து உற்சாகமாக இந்த விஷயத்தை கூறினார். அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கின்றது’ என பேசி இருக்கின்றார் அருண் விஜய்.

Published by
ramya suresh