Categories: Cinema News latest news

வெற்றிமாறன் கதைக்கு கிரீன் சிக்னல் கொடுக்காத சிம்பு!.. அடுத்த ஸ்கெட்ச் இந்த நடிகருக்கா?..

நடிகர் சிம்பு:

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி தற்போது பிரபல ஹீரோவாக வலம் வருகின்றார். தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருக்கின்றது. சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சிம்பு இடையில் பல சர்ச்சைகளில் சிக்கி தவித்தார்.

அந்தப் பிரச்சினைகளில் எல்லாம் இருந்து மீண்டு தற்போது தான் உண்டு தன் வேலையுண்டு என்று சினிமாவில் நடித்து வருகின்றார். மாநாடு திரைப்படத்தின் வெற்றியின் மூலமாக மீண்டும் கம்பேக் கொடுத்திருந்தார் நடிகர் சிம்பு. அதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சிம்புவின் லைன் அப்:

நடிகர் சிம்பு பத்து தல திரைப்படத்திற்குப் பிறகு கமிட்டான திரைப்படம் எஸ்டிஆர் 48. இந்த திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கி இருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் திடீரென்று படத்தின் பட்ஜெட் காரணமாக கமலஹாசன் நிறுவனம் விலகியதால் தற்போது தயாரிக்க ஆளில்லாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது.

அதற்கு அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்கின்ற திரைப்படத்தில் கமலஹாசனுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார் நடிகர் சிம்பு. அடுத்ததாக அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது

வெற்றிமாறன் கதையில் சிம்பு:

வெற்றிமாறன் கதையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது சிம்பு இந்த திரைப்படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா?என்கிற யோசனையில் இருக்கின்றாராம். இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தான்.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது சிம்புவுக்கும், கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமா? என்கின்ற யோசனையில் நடிகர் சிம்பு இருக்கின்றாராம். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் நடிகர் சிம்பு பேசிய கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டதாம்.

இந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில் படத்தை தாமதப்படுத்த வேண்டாம் என்பதற்காக நடிகர் ஜெயம் ரவியை படத்தில் நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்கே25 திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
ramya suresh