Categories: Cinema News latest news parthiban

Parthiban: பேசியே தாஜ்மஹாலை வித்துடுவார்!.. பார்த்திபனை சீண்டிய நடிகை!..

கே.பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர்களில் பார்த்திபன் முக்கியமானவர். பாக்கியராஜ் இயக்கிய சில படங்களில் சில காட்சிகளிலும் நடித்திருக்கிறார். தாவணி கனவுகள் படத்தில் நடிகர் திலகத்துடன் நடித்திருந்தார். அதன்பின் இயக்குனராக முடிவெடுத்து சொந்தமாக ஒரு கதை எழுதி ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் சந்தித்து கதை சொன்னார். அது நடக்காமல் போனதால் அந்த கதையில் அவரே ஹீரோவாக நடித்தார். அப்படி உருவான திரைப்படம் தான் புதிய பாதை.

முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கினார். பார்த்திபன் எதையும் வித்தியாசமாக சொல்வது, வித்தியாசமாக யோசிப்பது என்பது பார்த்திபனின் ஸ்டைல். சினிமாவில் மட்டுமல்ல. சினிமா விழாக்களிலும் பார்த்திபன் என்ன பேசப்போகிறார் என் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அந்த அளவுக்கு சுவாரஸ்யத்துடன் பேசுவார். எனவே நடிகர், இயக்குனர் என்பதை விட பேச்சாளர் பார்த்திபனை பலரும் ரசிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்நிலையில் பார்த்திபன் நடித்த உன்னை வாழ்த்தி பாடுகிறேன் படத்தில் அவருடன் நடித்த நடிகை மோகினி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘பார்த்திபன் மிகவும் திறமையானவர். பேசியே தாஜ்மஹாலை விற்றுவிடுவார். அது அரசாங்கத்திற்கும் தெரியாது. வாங்கியவருக்கும் அது தாஜ்மஹால் என்று தெரியாது. அந்த அளவுக்கு திறமை உள்ளவர். எதையும் வித்தியாசமாக யோசிப்பார். வித்தியாசமாக பேசுவார். அவரின் திறமைக்கு அவர் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு போவார் என எதிர்பார்த்தேன் ஏனோ அது நடக்கவில்லை’ என பேசியிருக்கிறார்.

அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன் ‘மோகினி பிசாசு பயமுறுத்தும் என சொன்னபோது நான் நம்பவில்லை. ஆனால் இப்போது நம்புகிறேன். அவரின் பாராட்டுக்கு பின்னால் புத்திசாலித்தனமும், அன்பும், நம்பிக்கையும் இருக்கிறது. உடனே தாஜ்மகாலை விற்று நான் எடுக்க விரும்பும் டார்க் வெப் படத்தை அதிக பட்ஜெட்டில் எடுத்து ஒரு பெரிய இடத்தை பிடிக்கும் உத்வேகம் வந்திருக்கு. அவங்க கூட நடிக்கும் போது 52 வார்த்தை கூட நான் பேசல. ஆனாலும் நன்றி மோகினி’ என நெகிழ்ந்திருக்கிறார் பார்த்திபன்.

Published by
ராம் சுதன்