மகளை கவனிக்காமல் விட்டு விட்டேன்!. பவதாரிணியை நினைத்து உருகும் இளையராஜா!....

by சிவா |
மகளை கவனிக்காமல் விட்டு விட்டேன்!. பவதாரிணியை நினைத்து உருகும் இளையராஜா!....
X

Ilayaraja: 1970களின் இறுதியில் அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கியவர் இசைஞானி இளையராஜா. இவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. 80களில் மொத்த கோலிவுட்டுமே இளையராஜவின் இசையை மட்டுமே நம்பியிருந்தது.

ஒரே நாளில் கம்போசிங் மற்றும் பாடல் ஒலிப்பதிவு என பரபரப்பாக பல படங்களுக்கும் இசையமைத்தவர் இவர். காலை 7 மணிக்கு ஸ்டுடியோவுக்கு வந்தால் இரவு 9 மணிக்குதான் வீட்டிற்கே செல்வார். மாலைகளில் படத்திற்கான பின்னணி இசை பணிகளை செய்வார். 10 மணிக்கு மேல் தயாரிப்பாளரின் அலுவகத்தில் கம்போசிங் இருக்கும் அவ்வபோது இசைக்கச்சேரிகளையும் நடத்துவார். இதனால் குழந்தைகளுடன் அவரால் நேரம் செலவழிக்க முடியவில்லை.

இசையமைக்க துவங்கி சில வருடங்களிலேயே 100 படங்களுக்கு இசையமைத்து முடிந்திருந்தார். பாலாவின் ‘தார தப்பட்டை’ படம் இளையராஜாவின் ஆயிரமாவது திரைப்படம். இப்போதும் நிற்காமல் படங்களுக்கு இசை, இசை நிகழ்ச்சி, வெளிநாட்டில் சிம்பொனி இசை என பிஸியாகவே இருக்கிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த வருடம் ஜனவரி 25ம் தேதி இலங்கைக்கு சிகிச்சைக்காக சென்றபோது மரணமடைந்தார். இன்று அவரின் நினைவு நாள். இந்நிலையில் இசைஞானி இளையராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் அவரே பேசி ஒரு ஆடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ‘எனது மகள் பவதா எங்களை விட்டு பிரிந்த நாள். அந்த குழந்தை என்னை விட்டு பிரிந்தபின்னர்தான் அவள் எவ்வளவு அன்பு மயமாக இருந்திருக்கிறாள் என்று எனக்கு புரிகிறது.

எப்போதும் இசை தொடர்பான வேலைகளிலேயே மூழ்கி இருந்ததால் என் குழந்தைகளை கவனிக்கமால் விட்டுவிட்டேன் என்கிற வேதனை எனக்கு ஏற்படுகிறது. அதேநேரம், என்னுடைய இசை பலரின் வேதனைகளுக்கும் மருந்தாக இருப்பதை நினைத்து என்னை ஆறுதல்படுத்திக்கொள்கிறேன்’ என பேசியிருக்கிறார். அதே ஆடியோவில் பேசியுள்ள கங்கை அமரன் ‘பவதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 12ம் தேதி அவரின் திதியும் வருகிறது. எனவே, அன்றே நினைவு நாளாக வழிபடவிருக்கிறோம். இசைக்கலைஞர்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும் என சொல்லியிருக்கிறார். இறுதியில் ‘என் மகள் பவதாவின் ஆத்மா சாந்தியடையை இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என இளையாராஜா பேசியிருக்கிறார்.

Next Story