வட சென்னை 2-வுக்கு ஆப்பு வைத்த சூர்யா!.. தனுஷுக்கு பதிலா சிம்பு!. என்னென்னவோ நடக்குது!..

Vaadivaasal: தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவிடம் சினிமா கற்றுகொண்டவர். மணிரத்னம் போல இவரும் ஒரு பர்பக்ஷனிஸ்ட். இவரின் படத்தில் தேவையில்லாக காட்சிகள் எதுவும் இருக்காது. கதைக்கு என்ன தேவையோ அது மட்டுமே படத்தில் இருக்கும்.
தனுஷை வைத்து முதல் படமான பொல்லாதவனை இயக்கினார். அந்த படமே பேசப்பட்டது. அதன்பின் மீண்டும் தனுஷை வைத்து ஆடுகளம் எடுத்தார். இந்த படத்திற்கு தனுஷ் தேசிய விருது பெற்றார். அதன்பின் வட சென்னை, விசாரணை, அசுரன், விடுதலை, விடுதலை 2 போன்ற படங்களை இயக்கினார் வெற்றிமாறன்.
இந்த படங்களால் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக வெற்றிமாறன் மாறியிருக்கிறார். அவரின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்களே ஆசைப்படுகிறார்கள். ஜூனியர் என்.டி.ஆர் போன்ற தெலுங்கு சினிமா நடிகர்களும் கூட வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பார்கள் என்கிற கேள்வி ரசிகர்களின் மனதில் பல வருடங்களாகவே இருக்கிறது. சமீபத்தில் குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் அடுத்த வருடம் வட சென்னை 2 துவங்கும் என சொல்லி அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அதேநேரம் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை துவங்கும் எண்ணமும் வெற்றிமாறனுக்கு இருக்கிறது. எனவே, அந்த படத்தை இப்போது துவங்கினாலும் அடுத்த வருடத்தில் முடிந்துவிடும் என தனுஷ் கணக்கு போட்டார். ஆனால், ‘படத்தை எப்போது முடிப்பீர்கள்? என சொன்னால் மட்டுமே கால்ஷீட் தருவேன்’ என சூர்யா சொல்லிவிட்டதால் வாடிவாசல் படம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டது என செய்திகள் கசிந்திருக்கிறது.
எனவே, சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் வெற்றிமாறன். ஏற்கனவே வட சென்னை படத்தில் சிம்பு நடிப்பதாகவே இருந்தது. ஆனால், அது நடக்காமல் போகவே தனுஷ் நடித்தார். எனவே, வட சென்னை 2-வில் சிம்பு நடிப்பாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால், சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கப்போவது வேறு கதை என்கிறார்கள். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.
வாடிவாசல் டிராப் ஆகிவிட்டதால் வட சென்னை 2 எப்போது துவங்கும் என தெரியவில்லை. சிம்பு படத்தை முடித்துவிட்டு சூர்யாவை சம்மதிகக் வைத்து வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை எடுக்கப்போய்விட்டால் தனுஷ் மேலும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.