அந்த இயக்குனருடன் கை கோர்க்கும் அல்லு அர்ஜூன்!. காம்பினேஷனே ஹைப் ஏத்துதே!..

Allu Arjun: தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். தெலுங்கில் பல படங்களிலும் நடித்திருந்தாலும் தமிழில் புஷ்பா படம் இவரை பிரபலப்படுத்தியது. இந்த படமும் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் உருவானது.
ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முதல் பாகம் சூப்பர் ஹிட் அடிக்கவே இரண்டாம் பாகம் உருவானது. சுமார் 400 கோடி செலவில் உருவான இப்படம் 1800 கோடி வரை வசூல் செய்தது. ஆனால், இந்த படத்தின் ரிலீஸான அன்று ஹைதராபாத்தில் ஒரு தியேட்டரில் படம் பார்க்கப்போனார் அல்லு அர்ஜூன்.
அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தார். அதோடு, அவரின் மகன் கோமாவுக்கு போனார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தெலுங்கானா போலீஸ் அல்லு அர்ஜூனை கைது செய்து ஒரு நாள் இரவு சிறையில் அடைத்தனர். இதனாலேயே புஷ்பா 2 படத்தின் மெகா வெற்றியை படக்குழு கொண்டாடவில்லை.
புஷ்பா 2-வுக்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஒரு படத்தில் நடிக்கிறார் என அறிவித்தார்கள். ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு சூப்பர் ஹீரோ கதையை இயக்கவிருக்கிறார் அட்லி. இந்த படத்தில் தீபிகா படுகோனே நடிப்பது சமீபத்தில் உறுதியானது. இதுபோக மேலும் சில நடிகைகள் நடிக்கவிருக்கிறார்கள்.
இதற்கிடையில் மலையாளத்தில் மின்னல் முரளி படத்தை இயக்கியவரும் நடிகருமான பாசில் ஜோசப் சமீபத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஒரு கதையை சொல்லி இருக்கிறார். அந்த கதை அல்லு அர்ஜுனுக்கு மிகவும் பிடித்துப்போக ஓகே சொல்லிவிட்டாராம். எனவே, அட்லி படத்திற்கு பின் அந்த கதையில் அல்லு அர்ஜூன் நடிக்க வாய்ப்பிருக்கிறது.