இந்தப் படத்தை எல்லாம் ரிலீஸ் பண்ணாதீங்கன்னு சொன்ன குரல்! ஆனா அட்டகத்தியைக் கெத்தாக்கிய இயக்குனர்!

2012ல் பா.ரஞ்சித்தின் எழுத்து, இயக்கத்தில் உருவான படம் அட்டக்கத்தி. தினேஷ், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 5 நிமிடங்கள் தான். படத்தை ஆரம்பத்தில் பெரிய அளவில் பாராட்டாதவர்கள் நாளாக நாளாகப் பிக்கப் ஆனது.
இந்தப் படத்தின் கதையே வித்தியாசமானது. ஆங்கிலத் தேர்வுல ஜெயிக்கறதுக்குப் போராடும் சராசரி கிராமத்து இளைஞனின் கதை. இவன் பஸ் ஸ்டாப்பில் நிற்கிற அனைத்துப் பெண்களிடமும் காதலை வெளிப்படுத்துகிறான்.
ஆனால் எல்லாமே சொதப்பலில் முடிகிறது. ஆனாலும் எப்படியாவது ஜெயித்து விட நினைக்கிறான். காதலில் ஜெயித்தானா இல்லையா? வெறும் அட்டக்கத்தி தானா என்பதுதான் படம். திரைக்கதையில் சுவாரசியமாக்கி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.
இவர் இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தை முதலில் எல்லாரும் ரிஜெக்ட் செய்தார்களாம். அப்புறம் இயக்குனர் கொடுத்த ஒரு ஐடியா ஒர்க் அவுட் ஆகவே படமும் பிக்கப் ஆனதாம். அவர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...
அட்டகத்தி படத்தை முதலில் பார்த்தவர் படம் நல்லா இல்லன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அவர் ஒரு பெரிய புரொடியூசர். ரெண்டாவதாகப் பார்த்த ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனமும் தயாரிப்பாளரை தனியாகக் கூப்பிட்டு, இந்த படத்தை எல்லாம் ரிலீஸ் பண்ணாதீங்க.

செலவு பண்ண வரைக்கும் பணம் வீண் தான் என்று சொல்லிட்டுப் போயிட்டாரு. இந்த மாதிரி படங்கள் எல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்கன்னு சொல்லிட்டாங்க. கடைசியில தயாரிப்பாளரே அவங்க சொன்னதை நம்ப ஆரம்பிச்சிட்டாரு.
அதுக்கு அப்புறம் வெங்கட் பிரபு சார், ஸ்டுடியோ கிரீன் எல்லாரையும் கூப்பிட்டு அந்தப் படத்துக்கு ஒரு திரையிடல் ஏற்பாடு பண்ணுனேன். அதுக்கப்புறம்தான் அந்தப் படம் அடுத்த கட்டத்துக்கே போச்சு என்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். இதுதான் இவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.