ஆட்டோகிராஃப் படத்துக்கு டிக்கெட் கிடைக்காத பாலசந்தர்... தியேட்டர்காரங்ககிட்ட அப்படியா கேட்டாரு?

நடிகரும், இயக்குனருமான சேரன் தமிழ்த்திரை உலகில் ஒரு முன்னணி இயக்குனராக இருந்தார். அவரது தவமாய் தவமிருந்து, வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராஃப் படங்கள் இன்றும் பேசக்கூடியவை. கடைசியாக அவர் நடித்த மலையாளப் படம் நரிவேட்டை. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அவர் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.
முதல்ல ஒரு நல்ல படத்தை டைரக்ட் பண்ணிட்டான்னா இன்டஸ்ட்ரில இருக்குற எல்லா டைரக்டர்களும் பேசுவாங்க. கூடுவாங்க. அவனைக் கொண்டாடுவாங்க. பாலசந்தர் எல்லாம் எத்தனை முறை கையைப் பிடிச்சிக் கட்டித் தழுவிருக்காங்க. அவரு கையைப் பிடிக்கும்போது தெரியும்.
இறுக்கமா பிடிப்பாரு. அதே மாதிரி நாம விரும்புற டைரக்டர்கள் பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா சார் இவங்க எல்லாம் நம்ம படத்தைப் பார்ப்பாங்க. நாம கையைக் கட்டிக்கிட்டு நிற்போம். இப்ப என்ன சொல்லப் போறாங்கன்னு அப்படியே பயமா இருக்கும். எக்ஸாம் எழுதுன மாதிரி இருக்கும். ஒரு கரஸ்பாண்டன்ட் நம்மை பேப்பரைத் திருத்துற மாதிரி இருக்கும். எனக்குப் பயமா இருக்கும்.
ஆனா தவமாய் தவமிருந்து படத்தை நாலு பேரும் பார்த்தாங்க. பாரதிராஜா, பாலசந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா சார் பார்த்தாங்க. படம் முடிஞ்சது. எழுந்திரிக்கல. ஒரு சத்தம் கிடையாது. அவங்க அப்படியே இருக்காங்க. அவங்க மவுனம் கலைக்கிறதுக்கு 10 நிமிஷம் ஆச்சு. அப்போ பாரதிராஜா சார் தான் மவுனம் கலைக்கிறாரு. 'இப்படி ஒரு படம் பண்ணலடா நாம..'ன்னு சொல்றாரு. அப்புறம் பாரதிராஜா சார் 'வாடா'ன்னு கூப்பிடுறாரு. நாலு பேரும் கட்டிப் பிடிக்கிறாங்க.
ஆனா இப்ப ஒரு டைரக்டருக்கு ஒரு டைரக்டர் கம்யூனிகேஷன் கிடையாது. அப்போ கொடுத்த அந்தப் பாராட்டு இப்ப கிடைக்கல. இன்னைக்கு படம் ஓடிடுச்சுன்னா பொறாமைப்படுறாங்க. நான் லப்பர் பந்து, மெய்யழகன் டைரக்டர்களைக் கூப்பிட்டு நான் பேசுனேன். அவங்க விரும்புறாங்களோ, இல்லையோ நான் பாராட்டுவேன்.
ஆட்டோகிராஃப் பார்த்துட்டு பாலசந்தர் சார் ஒருவாரம் கழிச்சி தியேட்டர்காரங்கக்கிட்ட டிக்கெட் கேட்குறாரு. டிக்கெட் இல்லை. 'சரிய்யா. நான் நின்னுக்கிட்டுப் பார்க்கிறேன். என்னை அலோவ் பண்ணுவியா?'ன்னு கேட்டார் என்கிறார் டைரக்டர் சேரன்.