உங்களுக்கு இது தேவையில்லாத வேலை... அமீரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பேரரசு

முருகபக்தர் மாநாட்டிற்கும், திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டு இயக்குனர் அமீர் தெரிவித்த கருத்து வைரலாகி உள்ளது. அவர் சொன்னது இதுதான்.
ஆன்மிகத்தை அரசியலோடு தொடர்புபடுத்தி நடத்தும் மாநாடு ஆபத்தானது. முருகன் எங்களுக்கு எதிரானவர் அல்ல. அவர் பெயரில் அரசியல் செய்வோர்தான் எதிரானவர் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
அமீரின் இந்தக் கருத்துக்கு பேரரசு பதிலடி கொடுத்துள்ளார். அரசியலில் ஆன்மிகம் கூடாது என அரசியல்வாதியோடு நின்று தான் கூவுறீங்க. உங்களுக்கு ஆன்மிகம் பிரச்சனை இல்லை. இந்து மதம்தான் பிரச்சனை. ஓட்டுக்காக சிறுபான்மையினர்னு சொல்றாங்களே... அவங்க எல்லாம் அரசியல்வாதியாக உங்களுக்குத் தெரியலையா?
இந்து மதத்துல இருந்துக்கிட்டு கடவுளை விமர்சிப்பவன் நாத்திகன். கடவுள் நம்பிக்கையோடு ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்தில் மூக்கை நுழைப்பவன் மதவாதி. ஒரு காலத்தில் நாத்திகம் கொள்கையாகவே இருந்தது. அதுவும் இன்னைக்கு அரசியலாகி விட்டது.
அரசியல்வாதியாக இருந்து நாத்திகம் பேசுறவங்களைப் பார்த்து உங்களால் அரசியல்ல நாத்திகம் பேசாதேன்னு சொல்ல முடியுமா? என காரசாரமாக பேரரசு கேள்வி எழுப்பி உள்ளார். அதே வேளையில் ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸ்சுக்கும் வேஷம் போடுற அரசியல்வாதிகள் இந்து பண்டிகையை மட்டும் புறந்தள்ளுவது ஏன்? அவங்களுக்கு எதிராக உங்களால குரல் கொடுக்க முடியுமா?
கோவிலுக்குள் வந்த அரசியல்வாதிகள் மசூதிக்குள் போகும்போது நெற்றியில் இருக்குற விபூதியை அழிக்கிறாங்க. குல்லா போடுறாங்க. அவங்ககிட்ட எல்லா மதத்தையும் ஒண்ணா பாருங்க. அரசியல் செய்யாதீங்கன்னு சொல்ல முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரே நான் கிறித்தவன் என்பதில் பெருமையா இருக்குன்னு சொல்றாரே... அவருகிட்ட மதத்தை ஏன் அரசியல் ஆக்குறீங்கன்னு கேட்க முடியுமா?
உங்களுக்கு என்னதான் பிரச்சனை? இந்த மத எதிர்ப்பை அரசியல் ஆக்கினால், அதன் ஆதரவும் அரசியல் ஆக்கத்தான் படும். உங்க மதத்தில் நிறை குறை இருந்தால் அதைப் பற்றிப் பேசுங்க. அடுத்தவர் மதத்துல அறிவுரை சொல்ல வேண்டாம். இது உங்களுக்கு தேவை இல்லாத வேலை என விளாசியுள்ளார் பேரரசு.