ரீ-ரிக்கார்டிங் பண்ணும்போதே படம் ஹிட்டு!.. கரகாட்டக்காரன் அனுபவம் சொல்லும் கங்கை அமரன்..

Karagatakaran: கங்கை அமரனின் இயக்கத்தில் 1989ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் கரகாட்டக்காரன். ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என சொல்லி நடிக்காமல் இருந்த கவுண்டமணியை இந்த படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்க வைத்தார் கங்கை அமரன்.
சிவாஜி - பத்மினி இணைந்து நடித்து வெளியான தில்லானா மோகனாம்பாள் படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து இப்படத்தின் கதையை கங்கை அமரன் உருவாக்கியிருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை செய்தது. இந்த படம் வெளியாகி ஒரு வாரம் தியேட்டர்களில் கூட்டமே இல்லை.
அதன்பின் பிக்அப் ஆகி பல தியேட்டர்களிலும் 100 நாட்கள் ஓடியது. அதுவும் சில தியேட்டர்களில் ஒரு வருடமெல்லாம் ஓடியது. இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக கனகா அறிமுகமாகியிருந்தார். இந்த ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. மேலும், கவுண்டமணி - செந்தில் காமெடி மற்றும் இளையராஜாவின் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இப்படத்தை பார்த்தார்கள். இந்த படத்தின் இறுதியில் வந்த பக்தி பாடலுக்கு பெண்கள் சாமி வந்து நடனம் ஆடினார்கள். இந்த படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து ரஜினி, கமல் போன்ற நடிகர்களே ஆச்சர்யப்பட்டார்கள். இந்த படம் ராமராஜனுக்கும் ஒரு முக்கிய படமாக அமைந்தது.
இந்நிலையில், இந்த படம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய கங்கை அமரன் ‘இந்த படத்திற்கும் மிகவும் ஜாலியாக சிரித்துக்கொண்டே இசையமைத்தார் அண்ணன் இளையராஜா. படத்திற்கான அத்தனை பாடல்களையும் சில நிமிடங்களிலேயே போட்டுகொடுத்துவிட்டார். இந்த படத்தின் பின்னணி இசை நடந்தபோது பிரசாத் ஸ்டுடியோவில் இருந்த எல்லோரும் பார்க்க வந்துவிட்டார்கள்.
இந்த படத்தின் முதல் காட்சியான ராமராஜன், கவுண்டணி, செந்தில் போன்றவர்கள் காரை தள்ளிகொண்டு நடந்து வரும்போது அண்ணன் போட்ட இசையை கேட்டு அங்கிருந்த எல்லோரும் சிரித்தார்கள். அப்போது படம் ஹிட் என்பது எனக்கு புரிந்துவிட்டது’ என பேசியிருக்கிறார்.