இப்படி கேக்குறதுதான் கோபம் வருது.. பிறந்தநாளின் போது கடுப்பான இளையராஜா

ilaiyaraja
இசைஞானி இளையராஜா நேற்றும் சரி இன்றும் சரி நாளையும் சரி இசைக்கு ராஜா இவர்தான். அப்படித்தான் இவரை இசை கடவுளாக அனைவரும் பார்த்து வருகின்றனர். சரஸ்வதி தாயின் தவப்புதல்வன் இளையராஜா என்றும் கூறி வருகிறார்கள். அந்த அளவுக்கு தன்னுடைய இசையில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நிகழ்த்தி இருக்கிறார் .சினிமாவில் இவர் கால் பதித்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆயினும் இவருடைய இசைக்கு அடுத்தடுத்த தலைமுறைகள் ரசிகர்களாக மாறி வருகின்றனர்.
என்னதான் ஏ ஆர் ரகுமான் அனிருத் இப்போது வந்த சாய் அவயங்கர் என புது இசை அமைப்பாளர்கள் வந்தாலும் இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. எல்லா கால சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு இவர் இசையமைத்திருக்கிறார். சோகத்தில் இருக்கிறீர்களா அதற்கும் இவருடைய பாடல்கள் தான் ஆறுதல் .சந்தோஷத்தில் இருக்கிறீர்களா அதற்கும் இவருடைய பாடல்கள் தான் ஆறுதல் என எல்லா வகையான சூழ்நிலைகளுக்கும் ஏற்ற வகையில் இவர் இசையமைத்திருக்கிறார்.
இந்த நிலையில் அவர் இன்று தனது 82 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். எல்லா தரப்பு ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். திரை பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் என அனைவருமே வாழ்த்துக்களை தொலைபேசி வாயிலாகவும் குறுஞ்செய்தி வாயிலாகவும் கூறி வருகின்றனர். இந்த பிறந்தநாளின் இவர் மக்களுக்கு ஒரு சூப்பரான செய்தி ஒன்றை கூறியிருக்கிறார் .
கடந்த ஆண்டு லண்டனில் மிகப்பெரிய அளவில் சிம்பொனி இசையை நிகழ்த்தி சாதனை படைத்த இளையராஜா ஆகஸ்ட் இரண்டாம் தேதி அதே ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து அதே சிம்பொனியை தன் நாட்டு மக்களுக்காக இங்கே நிகழ்த்தப் போவதாக கூறி இருக்கிறார். இதை நிருபர்களை அழைத்து இந்த செய்தியை தெரிவித்தார். அதோடு இதற்கு தமிழக முதல்வரும் பாராட்டி குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் என கூறினார் இளையராஜா.
ilaiyaraja
உடனே அந்த நிருபர்களில் ஒருவர் தமிழக அரசின் இந்த முயற்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது சட்டென கோபப்பட்டார் இளையராஜா. எப்படி பார்க்கிறீர்களா ?எப்படி பார்க்கணும் என எழுந்தவாறு அந்த நிருபரை பார்த்து கோபத்தில் கேட்ட இளையராஜா, இப்படி எல்லாம் கேட்கக்கூடாது. இப்படி கேட்பதனால் தான் எனக்கு கோபம் வருகிறது .இது அப்படியே வெளியே இளையராஜா கோபப்படுகிறார் என்று மாறிவிடுகிறது .நான் ஒரு இனிப்பான செய்தியை தெரிவித்து இருக்கிறேன். அவ்வளவுதான் என சொல்லி அந்த இடத்தில் இருந்து விலகி விட்டார் இளையராஜா.