ஒரு வாரம் தூங்காம!.. பேச வார்த்தையே வரல!. இளையராஜா ஃபீல் ஆயிட்டாரே!..

ilayaraja
Ilayaraja: அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கி தமிழ் சினிமாவில் கிராமத்திய இசையை புகுத்தி ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தவர் இளையராஜா. கிராமத்திய இசை மட்டுமின்றி மேற்கத்திய மற்றும் கர்நாடக இசையையும் தன்னால் செய்ய முடியும் என பலருக்கும் காட்டியவர் இவர்.
80களில் வெளியான 90 சதவீத படங்களுக்கு இளையராஜாதான் இசை. ரஜினி, கமல், மோகன், ராமராஜன், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்கள் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர். அதனால்தான் இவரை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கடவுளாக பார்த்தார்கள்.
இளையராஜா கோபக்காரர், தலைக்கணம் உடையவர் என பலரும் அவரை விமர்சிப்பது உண்டு. ஆனால், அதற்கெல்லாம் அவர் பதில் சொல்வது இல்லை. ‘நான் நிறைய சாதித்திருக்கிறேன். எனக்குதான் தலைக்கணம் இருக்கணும். சும்மா இருக்கும் நீ என்னை பற்றி பேசி காலத்தை வீணாக்குகிறாய்’ என ஊடகம் ஒன்றில் பேசினார்.
இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்களின் மனக்காயங்களுக்கு அவரின் பாடல்கள்தான் ஆறுதலாக இருப்பதாக அவர்கள் தொடர்ந்து செல்லி வருகிறார்கள். இளையராஜாவின் பாடல்கள் இல்லையென்றால் பலருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் என்று சொல்வர்களும் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட இளையராஜா இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடினார். ஒவ்வொரு வருடமும் அவரின் பிறந்தநாளினின் போது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரின் ஸ்டுடியோவுக்கு ரசிகர்கள் பலரும் நேரில் வந்து அவருக்கு வாழ்த்து சொல்வார்கள். அதுபோல இந்த வருடம் பலரும் வந்து அவர்களுக்கு வாழ்த்து சொன்னார்கள். அவர்கள் கொடுத்த அன்பளிப்புகளையும் இளையராஜா பெற்றுகொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா ‘இவங்களையெல்லாம் பார்த்தா எனக்கு வாய் அடைச்சி போகுது. வார்த்தையே வரல. அடேங்கப்பா இவ்வளவு தூரம் வராங்களே. கடவுள் நம் மீது எவ்வளவு கருணை வைத்திருக்கிறார் என தோன்றுகிறது. என் மீது எவ்வளவு அன்பு இருந்தால் இவங்க சிரமங்களை பார்க்காமல் பஸ்ஸிலும், டிரெய்ன்லயும், ஆட்டோவிலும் தூங்காம வந்திருப்பாங்க. என்னை பார்க்கிறது சாதாரண விஷயம்தான் . ஆனால், அவரை பார்க்க போகிறோம் என ஒரு வாரம் தூங்காமல் இருப்பவர்கள் எல்லாம் இருக்காங்க. அவங்களுகெல்லாம் நான் எப்படி வாழ்த்து சொறது. அந்த வார்த்தையே கிடையாது. நன்றி. வணக்கம்’ என நெகிழ்ந்து பேசினார்.