என் வாழ்நாள் லட்சியமே அதுதான்.. கேப்டன் மகன் முன்னாடியே சபதம் எடுத்த kpyபாலா
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு காமெடி ரியாலிட்டி ஷோவின் சீசன் 6 டைட்டில் வின்னர் தான் பாலா. தனது அனல் பறக்கும் பேச்சால் கவுண்டர் அட்டாக் செய்து காமெடி பன்ச்சால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். இவருக்கு ’பன்ச் பாலா’ என்ற பெயரும் இருக்கிறது.
பாலா இல்லாத நிகழ்ச்சியே விஜய் டிவி கிடையாது என்ற நிலை இருந்தது. அந்த அளவிற்கு பாலா தனது தனித்திறமையினால் உயர்ந்திருந்தார். தொடர்ந்து தன்னுடைய பாணியில் கலக்கிக் கொண்டிருந்த பாலாவுக்கு அவர் எதிர்பார்த்தது போலவே வெள்ளித்திரியிலும் வாய்ப்பு கிடைத்தது.
சின்ன சின்ன கதாபாத்திரங்கள், காமெடி வேடங்கள் என தனக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொண்டார். அப்படிப்பட்ட நிலையில் ஒரு கலைஞன் தனக்கு வரும் படங்களில் நடித்து அடுத்த கட்டங்களுக்கு நகர்வது மட்டுமின்றி அப்படி வரும் பணத்தை சேமித்து வைத்து வீடு, கார், நிலம் என முதலீடு செய்வது தான் பலரின் வழக்கமாக இருக்கும். ஆனால் கே பி ஒய் பாலா தனக்கு கிடைக்க கூடிய பணத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் பாலா தற்போது காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் கடந்து கொண்ட கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் பாலாவை வாழ்த்தியுள்ளார். கேப்டன் மகன் வந்த சந்தோஷத்தில் கண்கலங்கியபடி அவருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பாலா கூறியதாவது,
"நான் முதல் முதலில் பார்த்த செலிபிரிட்டி அது கேப்டன் விஜயகாந்த் சார்தான். தேர்தல் சமயத்தில் எங்கள் ஊரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் அப்பொழுதுதான் அவரை பார்த்தேன். அப்போது அவரை யார் என்று எனக்கு தெரியாது. என்னுடைய தாத்தா மிகப்பெரிய கேப்டன் ரசிகர் அவர்தான் எனக்கு சொன்னார். கேப்டனை பார்த்ததும் எங்கள் ஊரில் உள்ள பெண்களும் ஆண்களும் கத்தி ஆரவாரம் செய்தனர்”.
”சென்னை வந்த பிறகு நான் முதல் முதலாக சந்திக்க ஆசைப்பட்டது கேப்டன் அவர்களை தான். அதன் பிறகு கேப்டன் மறைவில் தான் அவரைப் பார்த்தேன். அன்று என் மனது கலங்கியது. ஒருத்தரின் இறப்பிற்கு வீடு அழுதது என்றால் அவர் குடும்பத் தலைவன் அதுவே ஒரு நாடு அழுதது என்றால் அவர் தான் உண்மையான தலைவன். என் வாழ்க்கையில் மிகப்பெரிய கனவு ஒன்று இருக்கிறது கேப்டன் செய்ததை 1 சதவீதமாவது நான் இறப்பதற்குள் இந்த மக்களுக்கு செய்து விட வேண்டும் அவ்வளவுதான்”. என்று விஜய பிரபாகனின் முன்னிலையில் கேபிஒய் பாலா சபதம் எடுத்துக் கொண்டார்.
