மழை, புயல் தடை எது நடந்தாலும் மாநாடு நடக்கும்!.. விஜய்தான் முதலமைச்சர்!.. பொங்கும் புஸ்ஸி ஆனந்த்...
விஜயின் அரசியல் மாநாடு பற்றி ஒரு முக்கிய தகவல் வெளிவந்திருக்கிறது.
Vijay: விஜய் அரசியலில் இறங்கிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி கட்சிக் கொடியையும் சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார். ஒரு நடிகராக அரசியல்வாதிகளிடமிருந்து சில பிரச்சனைகளை சந்தித்தார் விஜய். அவரின் தலைவா படத்தை 2 நாட்கள் முடக்கினார்கள்.
பலமுறை வருமான வரிசோதனை நடத்தினார்கள். மாஸ்டர் படப்பிடிப்பிற்காக நெய்வேலியில் இருந்த அவரை வருமான வரித்துறையினர் காரில் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அவரின் படங்கள் வெளியானபோது சில அரசியல் கட்சியினர் தியேட்டரில் இருந்த போஸ்டர்களையும், பேனர்களையும் கிழித்தார்கள். ஜோசப் விஜய் என அழைத்து மத ரீதியாக வன்மத்தை கக்கினார்கள்.
இதுவெல்லாம் சேர்ந்துதான் நாம் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற எண்ணத்தை விஜய்க்கு ஏற்படுத்தியிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ரஜினி போல் பின்வாங்காமல் கட்சியின் பெயரை அறிவித்துவிட்டார். ஹெச்.வினோத் இயக்கும் படமே தனது கடைசிப்படம் எனவும் சொல்லிவிட்டார்.
அதோடு, 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்திருக்கிறார். ஒருபக்கம், அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி பகுதியில் விஜயின் கட்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஒருபக்கம், இந்த மாநாடு நடக்காது, அனுமதி கிடைக்காது, தேதி மாற்றப்படும் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. மேலும், மாநாட்டை திறம்பட நடத்தி முடிக்கும் திறமை விஜய்க்கு இல்லை என்றும் சில சினிமா விமர்சகர்கள் யுடியூப்பில் பேசினார்கள். ஆனால், மாநாடு நடப்பது உறுதியாகியிருக்கிறது.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த் ‘மழை, புயல், தடை என எது வந்தாலும் மாநாடு திட்டமிட்டபடி நடக்கும். நிறைய பெண்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். முதல் மாநாடு வெற்றியாக அமையும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நமது இலக்கு 2026தான். 2026ம் வருடம் த.வெ.க. தலைவர் விஜய்தான் தமிழக முதலமைச்சர்’ என பேசியிருக்கிறார்.