சொன்னது சொன்னதுதான்.. 7 வருடங்களாக சொன்னதை செய்து வரும் சிவகார்த்திகேயன்

sivakarthikeyan
கடந்த 2018 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார் விவசாயி நெல் ஜெயராமன். நெல் ரகங்களை மீட்டு எடுப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் நெல் ஜெயராமன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் அவர் காலமானார். அந்த நேரத்தில் அவருடைய மகனின் படிப்பு செலவையும் மற்ற செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்கிறேன் என வாக்குறுதி அளித்திருந்தார் சிவகார்த்திகேயன்.
ஆனால் நடிகர்களை பொருத்தவரைக்கும் அந்த நேரத்தில் சொல்வது தான். அடுத்து அதை காப்பாற்ற மாட்டார்கள் என்ற ஒரு பிம்பம் அவர்கள் மீது எப்போதுமே மக்களுக்கு இருந்து வருகிறது. அந்த வகையில் தான் சிவகார்த்திகேயனின் இந்த வாக்குறுதியையும் மக்கள் எண்ணினார்கள். ஆனால் நெல் ஜெயராமன் மறைந்ததிலிருந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. இந்த ஏழு வருடங்களாக அவருடைய மகன் சீனிவாசனின் படிப்பு செலவை அவர்தான் கவனித்து வருகிறார்.
தற்போது பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை தொடங்க உள்ள சீனிவாசனுக்கு கல்லூரி படிப்புக்கான செலவையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டுள்ளார் .கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் கல்லூரியில் அவரை சேர்த்து விடுவதற்கான முயற்சியிலும் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் அவருடைய மகனுக்காக என்னவெல்லாம் செய்திருப்பாரோ அதை இன்றுவரை செய்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
sivakarthikeyan
பணம் கட்டுவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் நெல் ஜெயராமனின் மகன் சீனிவாசனை தொலைபேசியில் அழைத்து நலமும் விசாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நெல் ஜெயராமனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கை விரித்த நிலையில் பாண்டிச்சேரியில் இருந்து ஓடி வந்து நான் இருக்கிறேன் அண்ணா என கூறிய சிவகார்த்திகேயனின் அந்த புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.