கன்னடத்திற்காக உயிரையும் கொடுப்பேன்.. கமலின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த சிவராஜ்குமார்

கமல் நடிப்பில் வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகக் கூடிய திரைப்படம் தக் லைஃப் . இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்தான் நடந்தது. அப்போது சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அந்த விழாவில் கமல் பேசிய சில விஷயங்கள் மிகவும் சர்ச்சையாக பார்க்கப்படுகின்றன. அதாவது தமிழிலிருந்து பிறந்துதான் கன்னடம் என்று தெரிவித்திருந்தார் கமல்.
இந்த ஒரு கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அது மட்டுமில்லாமல் கர்நாடக மக்களிடம் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் கமல் அன்பு ஒரு போதும் மன்னிப்பு கேட்காது என்று தெரிவித்திருக்கிறார். இதை பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசும் போது கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு இருக்கிறது.
அது அவருக்கு தெரியாது என்று தெரிவித்திருந்தார். அந்த மேடையில் கமல் பேசும் போது ராஜ்குமாருடைய குடும்பம் என்னுடைய குடும்பம். அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும் முன் உயிரே உறவே தமிழே என்று தொடங்கினேன். ஏனெனில் தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று கூறியிருந்தார்.
இதிலிருந்துதான் அவர் பேசிய கருத்து பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சிவராஜ்குமார் அதற்கு பதிலடியாக அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். கமல் சார் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது. அவருக்கு தான் என்ன பேசினோம் என்று நன்றாகவே தெரியும். உரிய பதிலையும் அவர் கொடுப்பார். கன்னடம் மீது அன்பை வெளிப்படுத்துபவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களில் மட்டுமின்றி அனைத்து விஷயங்களிலும் அதை வெளிப்படுத்த வேண்டும். கன்னட திரைத்துறையிலேயே புதுமுகங்கள் வந்தால் அவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை.
kamal
பெரிய ஸ்டார்களின் படங்கள் வரும் போது மட்டும் பேசுவது சரியில்லை. நான் கன்னடத்திற்காக என் உயிரையும் கொடுப்பேன் என கமல் தக் லைஃப் விழாவில் மொழி குறித்து பேசிய சர்ச்சையான பேச்சுக்கு சிவராஜ்குமார் பதிலடி கொடுத்திருக்கிறார் .