Sundar C: பெரிய பட்ஜெட்.. பெரிய ஹீரோ!.. அடுத்தடுத்து 3 படங்களை இறக்கும் சுந்தர் சி!..
நடிகர் அருண் விஜய் சினிமாவில் அறிமுகமான முறைமாமன் படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர்.சி. அதன்பின் அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் மெகா ஹிட் அடித்து அவரை கோலிவுட்டின் முக்கிய இயக்குனராக மாற்றியது. ஜாலியான காதல் கலந்த காமெடி திரைப்படங்களை எடுப்பதில் சுந்தர்.சி கில்லாடி. சுந்தர்.சி படம் என்றால் தியேட்டரில் இரண்டரை மணி நேரம் ஜாலியாக அமர்ந்து சிரித்து விட்டு வரலாம் என்கிற நம்பிக்கை ரசிகர்களிடம் உருவாக்கியதுதான் சுந்தர்.சி-யின் சாதனை.
குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் படமெடுத்து கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை ஏற்படுத்தி கொடுப்பவர் சுந்தர்.சி. இப்போதும் அதை பின்பற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் நடிகராகவும் மாறிய சுந்தர்.சி பல படங்களிலும் நடித்து விட்டார். அதிலும் அரண்மனை படம் 4 பாகங்களாக வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது.
சுந்தர்.சி சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில், அவரின் இயக்கத்தில் உருவாகும் 3 பெரிய படங்கள் அடுத்த வருடம் அதாவது 2026-ல் வெளியாகவுள்ளது. தற்போது மூக்குத்தி அம்மன் 2 என்கிற திரைப்படத்தை அவர் இயக்கி நடித்து வருகிறார். அதில் நயன்தாரா அம்மனாக நடித்து வருகிறார். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. ரெஜினா கெசந்த்ரா, கன்னட நடிகை துனியா விஜய், ஊர்வசி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து வருகிறார்.
அடுத்து ரஜினியின் 173-வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.அருணாச்சலம் படத்திற்கு பின் பல வருடங்கள் கழித்து ரஜினியுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார் சுந்தர்.சி. கடந்த பல வருடங்களாகவே ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படங்களில் நடித்த வந்த ரஜினி சுந்தர்.சி இயக்கத்தில் விருப்பப்பட்டு நடிக்க முன்வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு விஷால் நடிக்க ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் சுந்தர்.சி. இந்த படத்தில் கயாடு லோகர், தமன்னா உள்ளிட்ட பலரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி சுந்தர்.சி இயக்கத்தில் 2026ம் வருடம் 3 பெரிய படங்கள் வெளியாகவிருக்கிறது.
