ஒரு ரிவ்யூக்கு 8 லட்சம்!.. கல்லா கட்டும் ஊடகங்கள்!.. பகீர் கிளப்பும் பிரபலம்...

சினிமா எப்போது வந்ததோ அப்போதே விமர்சனமும் வந்துவிட்டது. ஆனால், முன்பெல்லாம் சினிமாவுக்கான விமர்சனம் என்பது நேர்மையாக இருந்தது. படத்தின் நிறை, குறைகளை சரியாக சொன்னார்கள். முன்பெல்லாம் பத்திரிக்கைகளில் சினிமாவுக்கென தனி பத்திரிக்கையாளர் இருப்பார். அவர்தான் சினிமா தொடர்பான செய்திகளை பதிவிடுவார். விமர்சனமும் எழுதுவார். ஆனால், இப்போது யுடியூப் போன்ற ஊடகங்கள் வந்துவிட்டதால் பலரும் விமர்சகர்களாக மாறிவிட்டார்கள்.
ஒரு கேமரா வைத்துக்கொண்டு விமர்சனம் என்கிற பெயரில் 12 நிமிடங்கள் வாய்க்கு வந்ததை பேசி அதன் மூலம் கல்லா கட்டுகிறார்கள். அதிலும், புளூசட்ட மாறன் போன்றவர்கள் பெரிய நடிகர்களின் படங்களை கிண்டலடித்தும், நக்கலடித்தும் விமர்சனம் செய்வார். தக் லைப் படத்திற்கு அவர் கொடுத்த தரம் கெட்ட விமர்சனத்தை பார்த்தாலே அவரின் தரம் தெரியும். அந்த வீடியோவையும் பல லட்சம் பார்த்து ரசிக்கிறார்கள்.
எந்த படத்தையும் எவரும் விமர்சிக்கலாம். 150 ரூபாய் கொடுத்து படம் பார்க்கும் ரசிகனும் படம் பிடிக்கவில்லை என்றால் திட்ட உரிமை இருக்கிறது. ஆனால், உள்ளுக்குள் அந்த நடிகரின் மீது வன்மத்தை வைத்துக்கொண்டு பேசும்போது அங்கு காழ்ப்புணர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது. ஒருபக்கம், பணம் வாங்கிக்கொண்டு படத்தை பற்றி ஆஹா ஓஹோ என பாராட்டி விமர்சனம் செய்யும் விமர்சகர்களும் இங்கு இருக்கிறார்கள்.
சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் இதுபற்றி விமர்சிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பின் Paid Reviewers அதாவது பணம் வாங்கிக்கொண்டு படத்தை விமர்சனம் செய்பவர்களை பற்றி பலரும் பேச துவங்கிவிட்டனர். இந்நிலையில்தான், பல வருடங்களாக திரையுலகில் சினிமா பத்திரிக்கையாளராக இருக்கும் வலைப்பேச்சு பிஸ்மி ஊடகம் ஒன்றில் பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
உண்மையான பத்திரிக்கையாளர் காசு வாங்கிகொண்டு விமர்சனம் செய்யமாட்டார். ஆனால், யுடியூப்பில் விமர்சனம் என்பது அதிகரித்துவிட்டதால் இப்போது சிலர் அதில் பணம் வாங்குகிறார்கள். அவர்கள் படத்தின் குறைபற்றி பேசவே மாட்டார்கள். தயாரிப்பு நிறுவனங்களே அவர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். சமீபத்தில் ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் நான் பேசிகொண்டிருந்த போதே ஒரு யுடியூபரின் போன் நம்பரை என்னிடம் கேட்டார்கள்.
அதேபோல், நியூஸ் பேப்பரில் ஒரு படம் பற்றி அரை பக்கம் கட்டுரை எழுதுகிறார்கள். அதாவது, விளம்பரம் என சொல்லாமலேயே செய்தி போல எழுதுகிறார்கள். இதற்காக 8 லட்சம் வரை பணம் வாங்குகிறார்கள். சில வார இதழ்களில் தொடர்ந்து சில நடிகர்களின் பேட்டிகள் வெளியாகும். அதற்கும் பணம் கொடுக்கப்படுகிறது’ என அவர் பேசியிருக்கிறர். சின்ன ஊடகங்களுக்கு சில ஆயிரம் கொடுக்கிறார்கள்.
சினிமா தயாரிப்பாளர்கள் இதை தொடர்ந்து வருகிறார்கள். யாருடைய வீடியோவை அதிகம் பார்க்கிறார்கள் என கணக்கெடுத்து அவர்களிடம் பேசி பணம் கொடுத்து தங்கள் படங்களை புரமோட் செய்கிறார்கள். அந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு படத்தை பார்க்கலாம் என்கிற எண்ணம் வருகிறது. இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் வருகிறது. இதனால் Paid Reviewers அதிகரித்துவிட்டனர்.