கலாய்க்கும் ரசிகர்கள்!. வேட்டையன் படத்தில் அதிரடி மாற்றம்!. இது முன்னயே பண்ணி இருக்கலாம்!..
Vettaiyan: ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் ரஜினியை வைத்து இயக்கியுள்ள திரைப்படம்தான் வேட்டையன். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். போலீசார் செய்யும் என்கவுண்டர்கள் தொடர்பாக இந்த கதையை எழுதியிருக்கிறார் ஞானவேல்.
இந்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க பஹத்பாசில், ரித்திகா சிங், துஷரா விஜயன், அமிதாப்பச்சன், தெலுங்கு நடிகர் ராணா பல பலரும் நடித்திருக்கிறார்கள். ஒரு போலீஸ் அதிகாரியாக பலரை என்கவுண்டர் செய்யும் ரஜினி ஒரு கட்டத்தில் அது தவறு என புரிந்து அதற்கு எதிராக போராடும் கதைதான் வேட்டையன்.
இதுவரை இல்லாத அளவுக்கு ரஜினி ஒரு வித்தியாசமான கதையில் நடித்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய ரஜினி இப்படம் பற்றி பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
கமர்ஷியல் படம் வேண்டுமெனில் நான் லோகேஷ் மற்றும் நெல்சனிடம் போயிருப்பேன். வித்தியாசமான கதைக்காகவே நான் ஞானவேலை தேர்ந்தெடுத்தேன் என பேசி அதிர வைத்தார். மேலும் வழக்கம் போல் சில குட்டிக்கதைகளையும் சொன்னார். இசையமைப்பாளர் அனிருத்தை மிகவும் பாராட்டியும் பேசியிருந்தார்.
இந்த படத்தில் நடித்துள்ள அமிதாப்பச்சனுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்திருக்கிறார். டிரெய்லரில் அவரின் குரல் கணீரென ஒலித்தது. ஆனால், பிரகாஷ்ராஜை பேச வைத்துவிட்டு அதை ஏஐ மூலம் அமிதாப்பச்சனுக்கு பொருந்துவது போல மாற்றவிருக்கிறார்கள் என்றுதான் முதலில் செய்தி வெளியானது. ஆனால், டிரெய்லரில் பிரகாஷ்ராஜின் குரலை அப்படியே பயன்படுத்தி இருந்தனர்.
ஆனால், பிரகாஷ்ராஜின் குரல் அமிதாப்பச்சனுக்கு கொஞ்சம் கூட பொருந்தவில்லை என்கிற விமர்சனம் எழுந்தது. சமூகவலைத்தளங்களில் பலரும் இதை கிண்டலடித்தனர். எனவே, ஏஐ மூலம் குரலை அமிதாப்பச்சனுக்கு ஏற்றார் போல் மாற்ற திட்டமிட்டிருக்கிறார்கள் என இப்போது செய்திகள் கசிந்திருக்கிறது.