இனிமே இது முடிஞ்சா என்ன? முடியலைனா என்ன? தக் லைஃப் திடீர் அறிவிப்பால் கடுப்பில் ரசிகர்கள்

by AKHILAN |
இனிமே இது முடிஞ்சா என்ன? முடியலைனா என்ன? தக் லைஃப் திடீர் அறிவிப்பால் கடுப்பில் ரசிகர்கள்
X

Thuglife: கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் அடுத்த கட்ட அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் உச்சகட்ட கடுப்பாகி வருகின்றனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த திரைப்படம் தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் ரிலீஸுக்கு முன்னர் படக்குழு ஒரு மாதத்திற்கும் மேலாக ப்ரமோஷன் செய்து வந்தது. அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என பேசியிருப்பார். இது கர்நாடகா மக்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அங்குள்ள அமைப்புகள் உடனே கமல்ஹாசனை இதற்கு மன்னிப்பு கோரவேண்டும். இல்லை என்றால் அவருடைய தக் லைஃப் படத்தை இங்கு வெளியிட அனுமதி கொடுக்க முடியாது என ஆர்ப்பாட்டம் நடத்தினர். கன்னட சினிமா வர்த்தக சபையும் கமல்ஹாசனுக்கு மன்னிப்பு கேட்க அவகாசம் கொடுத்தது.

ஆனால் தான் எந்த விஷயத்தையும் தவறாக பேசவில்லை. நான் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இதை அடுத்து தன்னுடைய தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட அனுமதி கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கமல்ஹாசனையும் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை சுமூகமாக முடிக்க அறிவுரை வழங்கியிருந்தனர். ஆனாலும் தவறாக புரிந்து கொண்டதற்கு தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இதை தொடர்ந்து கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில் தக் லைஃப் திரைப்படம் வெளியானது. ஆனால் படத்திற்கு முன்னர் இருந்த பெரிய எதிர்பார்ப்பு ரிலீசுக்கு பின்னர் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கிறது.

படத்தின் திரைக்கதையிலிருந்து பல காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய அளவில் விமர்சனங்களை குவித்து வசூல் அடி வாங்கி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் படத்தினை வெளியிட கேட்கப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எவர் வேண்டுமானாலும் படத்தை வெளியிடலாம். அதை யாராலும் தடுக்க முடியாது. உடனே அரசு இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். ஒருவரை துப்பாக்கி முனையில் வைத்து சரி செய்யுங்கள் பின்னர் படத்தை வெளியிடுங்கள் என யாராலும் கூற முடியாது.

படத்தை பார்த்து மக்கள்தான் அதை ஒப்புக்கொள்ள வேண்டுமா எதிர்க்க வேண்டுமா என முடிவு செய்ய முடியும். ஒரு படம் தடையில்லா சான்று பெற்றிருந்தால் அதை வெளியிட தடை விதிக்க யாராலும் முடியாது. சட்டத்தின்படி அனைத்தும் நடைபெற வேண்டும். மற்றவர்களின் வெறுப்பு வெறுப்புகளுக்காக எதையும் மாற்ற முடியாது. மக்கள் முடிவு செய்யப்பட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story