சென்னையில் பெரும் புரட்சியை உண்டாக்கிய சோவின் நகைச்சுவை நாடகம்...சினிமாவுக்கு வந்தது எப்படி?
பார் மகளே பார் என்ற படத்தில் மனோரமாவுக்கு ஜோடியாக அனுபவமிக்க சிரிப்பு நடிகர் தேவைப்பட்டார். புதுமுகம் என்றாலும் ரசிகர்களை அனாயசமாகக் கவர்ந்து விட்டார். அவர் தான் நகைச்சுவை நடிகர் சோ.
இவரது இயற்பெயர் ராமசாமி. சிறுவயதில் மிகவும் குறும்புக்காரராக இருந்தார். அவர் எதற்கெடுத்தாலும் அச்சச்சோ அது சோ என்று கூறுவார். அபசகுணம் மாதிரி அடிக்கடி பிள்ளை கூறுவதால் அவரை சோ என்றே அழைத்தனர். நாளடைவில் அவரது பெயரே சோ வாகி விட்டது.
கல்வி, பொருள் என எக்குறையும் இல்லாத குடும்பத்தில் பிறந்தவர் சோ. தந்தை ஸ்ரீநிவாசன். வழக்கறிஞர். செங்கற்பட்டைச் சேர்ந்தவர். காங்கிரஸ்காரர். தாய் ராஜம்மா. இத்தம்பதியினருக்கு 2வது மகன் தான் சோ. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் மைலாப்பூரில் உள்ள பள்ளியில் படிப்பை முடித்தார்.
படிப்பில் கெட்டி...குறும்பில் சுட்டி...பள்ளிப்படிப்பு முடிந்ததும் லயோலா காலேஜ், விவேகானந்தா காலேஜ்களில் படித்தார். பிஎஸ்சி படிக்கையில் முதன் முதலாக நாடகத்தில் நடித்தார்.
ஆனந்தவிகடன் பத்திரிகையில் வெளியான கல்யாணி என்ற கதையை நாடகமாக்கி நடித்தார். காத்தாயிகிட்டு கிருஷ்ணமூர்த்தி என்பவர் தான் அவர் மேடை நாடகம் ஏற காரணமாக இருந்தார்.
இவர் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராக இருந்தால் எப்போதும் அதைப் பற்றியே பேசுவார். நடிப்பில் கூட அக்கறை இல்லை. நாடகத்தில் இவருக்குக் கிடைத்த பேரு தான் நடிப்பில் பற்று ஏற்படக் காரணமானது.
பிஎஸ்சி முடித்ததும் சட்டக்கல்லூரியில் சேர்த்து படிப்பை முடித்து வழக்கறிஞரானார். சென்னை டிடிகே கம்பெனியில் சட்ட ஆலோசகரானார்.
யுனெட்டட் அமெச்சூர் குழுவினரின் பெற்றால் தான் பிள்ளையா என்ற நாடகத்தில் சோ நடித்தார். சிவாஜி அவரது நடிப்பைப் பாராட்டினார். அதோடு மட்டுமல்லாமல் பார் மகளே பார் படத்தில் நடிக்கவும் சிபாரிசு செய்தார் சிவாஜி.
தொடர்ந்து சிவாஜி, பீம்சிங், சுப்புராமன் ஆகியோர் ஊக்கம் கொடுத்தனர். படங்களில் புகழ்பெற நாடக அனுபவம் தேவை என முடிவு செய்த சோ நாடகங்களை எழுத ஆரம்பித்தார். மக்கள் முன்பு பாராட்டு பெற்றால் சினிமாவில் நடிப்பது சாதாரணம் தான் என்பதை உணர்ந்தார்.
அவர் எழுதிய மனம் ஒரு குரங்கு என்ற நாடகம் அரங்கேறியதும் மக்களிடம் மகத்தான வரவேற்பைப் பெற்றார். சம்பவாமி யுகே யுகே, கோவா டிஸ் ஆகிய நாடகங்களும் இவருக்கு பெரும் வரவேற்பைத் தந்தன.
நாடக உலகில் ஜாம்பவான் ஆனார் சோ. நாடகத் தயாரிப்பாளர், கதை-வசனகர்த்தா, நடிகர் என பன்முகக் கலைஞரானார் சோ.
மெட்ராஸ் பை நைட் என்ற நகைச்சுவை நாடகம் சென்னையில் புரட்சியையே உண்டாக்கியது. மறக்க முடியுமா என்ற படத்தில் நகைச்சுவை செய்து சிந்திக்கவும் வைத்தார் சோ.
மேடை ஏறினால் போதும். ஒரு துறையையும் விட்டு வைப்பதில்லை. எல்லாவற்றையும் கேலி செய்வார் சோ. ஆனால் அவரது வசனம் செம காமெடியாக இருக்கும். இதனால் யாரும் இதைத் தவறாக எண்ண மாட்டார்கள். நாடகங்களை உருவாக்க அவரது மனைவி சகுந்தலா உதவியாக இருந்தார். இறைவன் இறந்துவிட்டானா என்ற நாடகத்தை அரங்கேற்றினார்.
தனது மனதில் தோன்றியதை சோ இவ்வாறு சொல்கிறார். என் மனப்போக்கைப் பற்றி சில வார்த்தைகள், நாடகங்கள் மூலமாகவோ திரைப்படங்கள் மூலமாகவோ, என்ன சாதிக்கப் போகிறேன் என்று நான் எண்ணிப் பார்;ப்பதே கிடையாது.
ஏதாவது சாதித்திருந்தால் அது என்னையும் அறியாமல் நடந்திருக்க வேண்டும். ஒன்றுமே சாதிக்கவில்லை என்றால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்குப் பிடித்ததை என் மனதிற்கு ஏற்றவாறு நான் செய்து வருகிறேன். இவற்றில் வெற்றியா, தோல்வியா என்பதைப் பற்றி நான் யோசித்துப் பார்ப்பதே கிடையாது.