Cinema News
தீபிகா படுகோனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவாரா சிவகார்த்திகேயன்??… “அயலான்” படத்தில் இடம்பெற்ற அந்த காட்சி என்ன??
பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் நடிப்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகவுள்ள திரைப்படம் “பதான்”. இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இணையத்தில் வெளியாகியிருந்தது. அதில் தீபிகா படுகோன் காவி நிறத்தில் கிளாமராக ஒரு ஆடை அணிந்திருந்தார். மேலும் அதில் ஷாருக்கான் பச்சை நிறத்தில் ஒரு ஆடை அணிந்திருந்தார்.
இதனை தொடர்ந்து தீபிகா படுகோன், ஷாருக்கான் ஆகியோரின் ஆடைகளை சுட்டிக்காட்டிப் பேசிய மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா “காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து இந்த பாட்டை நீக்க வேண்டும். இல்லை என்றால் மத்திய பிரதேசத்தில் இந்த படம் வெளியாகாது” என கண்டித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இணையத்தில் இவரது பேச்சுக்கு ஆதரவாக சிலர் பேசத் தொடங்கினர். இந்த சர்ச்சை இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் இப்போது சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் இது போன்ற சர்ச்சைக்குரிய ஒரு காட்சி இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளதாம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் “அயலான்”. இத்திரைப்படம் ஏலியனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைவு திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் “இன்று நேற்று நாளை” என்ற வெற்றித் திரைப்படத்தை இயக்கியவர். மேலும் “அயலான்” திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
“அயலான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் இத்திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆதலால் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் “அயலான்” திரைப்படத்தில் பாஜகவை எதிர்த்து ஒரு காட்சியை இயக்குனர் வைத்திருப்பதாக ஒரு தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
அந்த குறிப்பிட்ட காட்சியை எடுத்து முடித்தப்பின் எடிட் செய்து பார்த்தபோது இந்த காட்சியால் இந்த படம் ஒரு Anti BJP படம் போல் ரசிகர்களுக்கு தோன்றுமே என படக்குழுவினர் சிந்தித்தனராம். உடனே சென்சார் போர்டில் உள்ள ஒரு அதிகாரியிடம் அந்த காட்சியை போட்டுக்காட்டினராம். அதற்கு அந்த அதிகாரி, அந்த காட்சியை எப்படியாவது நீக்கிவிடுங்கள் என கூறிவிட்டாராம். ஆனால் அந்த காட்சியை நீக்கினால் அந்த படத்தின் கதையே திசைமாறிவிடுமாம். ஆதலால் படக்குழுவினர் இந்த சர்ச்சையை முன்கூட்டியே தவிர்க்க என்ன செய்யலாம் என கலந்தாலோசித்து வருகிறார்களாம்.