ஆஹா பேஷ் பேஷ்...இப்படி ஒரு கதையா? தளபதி 66 படத்தை புகழ்ந்த விஜய்...!

தனது திரை வரலாற்றிலேயே முதல் முறையாக நடிகர் விஜய் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் தற்போது நடித்து வருகிறார். இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் பிற மொழி படத்தில் நடிப்பதில் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தற்போது பீஸ்ட் படத்தை முடித்துள்ள விஜய் அடுத்ததாக அவரின் 66 வது படமாக உருவாக உள்ள தெலுங்கு படத்தில் இணைந்துள்ளார்.
இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளதும், தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

vijay
மேலும் தளபதி 66 படத்தில் இசையமைப்பாளராக தமனும், நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவரை படக்குழுவினர் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் படம் குறித்த தகவல் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியுள்ளார்.
அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தயாரிப்பாளர் தில் ராஜூ, "தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. தளபதி 66 படத்தின் கதையை கேட்ட விஜய் கடந்த 20 வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல கதையை கேட்டியிருக்கிறேன் என கூறினார்.
தளபதி 66 படப்பிடிப்பு முடிந்த பிறகு, அந்த நேரத்தில் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பதை பொறுத்தே, தீபாவளி அல்லது பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்" என தில் ராஜூ கூறியுள்ளார். விஜய் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.