More
Categories: Cinema History Cinema News latest news

உலக நாயகனின் ஆஸ்தான இயக்குனர்… கே.விஸ்வநாத்தின் படைப்புலகம்… ஒரு பார்வை…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல கிளாசிக் படங்களை இயக்கிய பெருமைக்குச் சொந்தக்காரரான கே.விஸ்வநாத், இன்று காலை நமது உலகத்தை விட்டுப் பிரிந்தார். இந்த வேளையில் தென்னிந்திய திரை உலகத்தின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் கே.விஸ்வநாத்தின் படைப்புலகை குறித்து ஒரு மீள் பார்வையை ஓடவிடலாம்.

K.Viswanath

கே.விஸ்வநாத்தின் திரைப்படங்கள் வணிக திரைப்படங்கள் என்ற ஒற்றை வார்த்தையில் அடக்குவது மிகப்பெரிய அபத்தம். கலையின் ஆழத்தை வெளிக்காட்டி அதில் கொஞ்சம் வணிகத்தை பூசிக்கொடுத்தவர் அவர். அவரது திரைப்படங்களில் ஒரு முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், அவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக ஏற்றதாழ்வுகளை எதிர்த்து கேள்விக்கேட்கும்படி உருவானதே ஆகும்.

Advertising
Advertising

1981 ஆம் ஆண்டு இவர் இயக்கிய தெலுங்கு திரைப்படமான “சப்தபாடி” சமுதாயத்தில் நிலவி வரும் ஜாதி வேற்றுமைகளை தோலுரித்து காட்டியது. அதே போல் 1987 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான “ஸ்வயம்க்ருஷி” என்ற தெலுங்கு திரைப்படம் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியை சுற்றி நடக்கும் கதைசயம்சம் கொண்ட திரைப்படமாகும்.

K.Viswanath

மேலும் கே.விஸ்வநாத் இயக்கிய “சுபலேகா” என்ற திரைப்படம் வரதட்சணை கொடுமையால் பெண்கள் படும் அவஸ்தையை வெளிச்சம் போட்டு காட்டியது. இது மட்டுமல்லாது பல இந்திய கலைகளை அடிப்படையாக வைத்து பல திரைப்படங்களை உருவாக்கியவர் கே.விஸ்வநாத்.

1980 ஆம் ஆண்டு கே.விஸ்வநாத் இயக்கிய “சங்கராபரணம்” திரைப்படத்தை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். இத்திரைப்படம் தெலுங்கு திரைப்படமாக இருந்தாலும் தமிழில் மாபெரும் வெற்றிப்பெற்றது. குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தமிழ்நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் ஒலித்தது.

Sankarabharanam

அக்காலகட்டத்தில் மிகப் பிரபலமான திரைப்படமாக விளங்கிய “சங்கராபரணம்” கர்னாடக இசையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். அதே போல் கே.விஸ்வநாத் இயக்கத்தில் 1983  ஆம் ஆண்டு வெளியான “சாகர சங்கமம்” திரைப்படம் பரதநாட்டிய கலையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் தமிழில் “சலங்கை ஒலி” என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

Salangai Oli

கமல்ஹாசனின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக “சாகர சங்கமம்” அமைந்தது. இவ்வாறு சமூக ஏற்றத்தாழ்வு, இந்திய கலைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தனது படைப்புலகத்தை உருவக்கிக்கொண்டவர் கே.விஸ்வநாத்.

இந்தியாவின் மிக உயரிய விருதுகளாக மதிக்கப்படும் “பத்ம ஸ்ரீ”, “தாதா சாகேப் பால்கே” போன்ற விருதைகளை பெற்ற பெருமைக்குச் சொந்தக்காரர் இவர். அதே போல் தனது படைப்புகளுக்காக 6 தேசிய விருதுகளையும் 8 நந்தி விருதுகளையும் 8க்கும் மேற்பட்ட பிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றவர் கே.விஸ்வநாத்.

K.Viswanath and KamalHaasan

அதே போல் கல்ஃப் ஆந்திராவின் வாழ்நாள் சாதனையாளர் விருது, பிரான்ஸ் நாட்டின் பெசான்கான் சர்வதேச திரைப்பட விழாவின் “பிரைஸ் ஆஃப் தி பப்ளிக்”  போன்ற சர்வதேச அளவிலான விருதுகளை பெற்று தென்னிந்திய சினிமாவுக்கு உலகளவில் பெருமை சேர்த்தவர் கே.விஸ்வநாத்.

K.Viswanath

இவ்வாறு பல இயக்குனர்களின் முன்னோடியாக திகழ்ந்த கே.விஸ்வநாத்தின் மறைவு, தென்னிந்திய சினிமாவுக்கே பேரிழப்பு என்றுதான் கூறவேண்டும். கே.விஸ்வநாத் இந்த உலகை விட்டு மறைந்தாலும் தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் நினைவில் என்றும் வாழ்ந்துகொண்டேதான் இருப்பார்.

இதையும் படிங்க: தண்ணீர் பாட்டில் தராததால் படத்தில் இருந்து விலகிய விவேக் பட நடிகை… இதுக்கெல்லாமா இப்படி பண்ணுவாங்க!!

Published by
Arun Prasad

Recent Posts