ஹீரோ பில்டப்பே கொடுக்காமல் ரசிகர்களை கவர்ந்த மகேந்திரன்.. மறக்க முடியாத உதிரிப்பூக்கள்...

Mahendran
தமிழ்ப்பட உலகில் எத்தனையோ படங்கள் யதார்த்தமாக வந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. இப்படிப்பட்ட படங்களை எடுப்பதற்கு ஒரு அசாத்திய தைரியம் வேண்டும். கமர்ஷியலாகக் கல்லா கட்ட நினைப்பவர்கள் கண்டிப்பாக இது போன்ற படங்களை எடுக்க மாட்டார்கள். அந்த வகையில் ஒரு இயக்குனர் தான் மகேந்திரன்.
1978ல் இவர் இயக்கிய முதல் படம் முள்ளும் மலரும். ஏவிஎம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் காமெடி, சண்டை மற்றும் ஹீரோயிசங்கள் என்று எதுவுமே இருக்காது. படத்தில் கதை தான் நாயகன்.

Mullum Malarum
அது போகிற போக்கில் தான் கேரக்டர்கள் எல்லாமே பயணிக்கும். ரசிகர்களுக்கு யதார்த்தத்தை உணர வைப்பார் இயக்குனர். இதற்காக தான் எடுக்கும் காட்சிகளில் கதாநாயகருக்காக எந்த விதமான சமரசமும் செய்து கொள்ள மாட்டார். பெரிய சூப்பர்ஸ்டாரான ரஜினிக்கே இவர் பில்டப் கொடுக்காமல் படம் எடுத்தார் என்றால் அது ஆச்சரியம் தான்.
அதே போல நடிகர்கள் பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டிய தேவையில்லை. முக பாவனைகள் மூலமே புரிய வைக்கலாம் என்ற தனி பாணியைத் தனது படங்களில் கொண்டு வந்து தமிழ்த்திரை உலகிற்குப் புதிய வழித்தடம் போட்டவர் இவர் தான். இவர் இயக்கத்தில் நண்டு, உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற படங்கள் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான ரசனையை உண்டு பண்ணும். இதனால் தான் இன்றளவும் இவரது படங்கள் பேர் சொல்கின்றன.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தான் இவரது சொந்த ஊர். இயற்பெயர் அலெக்சாண்டர். இவர் முதன் முதலில் கதை ஆசிரியராகத் தான் திரைத்துறையில் நுழைந்தார். 1966ல் இவர் எழுதிய முதல் படம் நாம் மூவர். 1974ல் தங்கப்பதக்கம் படத்திற்கு வசனம் எழுதியவர் இவர் தான்.