மனைவி இறந்த அடுத்த நாளே படப்பிடிப்புக்கு வந்த பிரபல இயக்குனர்… அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா??

0
325
SPMuthuraman
SPMuthuraman

1970 மற்றும் 80களில் டாப் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர்தான் எஸ்.பி.முத்துராமன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஜெயசங்கர், முத்துராமன் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றித்திரைப்படங்களை இயக்கியுள்ளார் முத்துராமன்.

குறிப்பாக “பிரியா”, “கழுகு”, “சகலகலா வல்லவன்”, “நல்லவனுக்கு நல்லவன்”, “ஜப்பானில் கல்யாணராமன்”, “மிஸ்டர் பாரத்” போன்ற பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

SPMuthuraman
SPMuthuraman

இவர் இயக்கிய “ஆறிலிருந்து அறுபது வரை” திரைப்படத்திற்காக 1979 ஆம் ஆண்டின் சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில விருதை பெற்றார். மேலும் 2012 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதும் எஸ்.பி.முத்துராமனுக்கு வழங்கப்பட்டது.

சினிமாத்துறையை பொறுத்தவரை தனது வாழ்நாளையே சினிமாவிற்கு அர்பணித்து, சினிமாவே தன்னுடைய வாழ்க்கை என வாழ்ந்து வருபவர்கள் பலர் உண்டு. இதற்கு எஸ்.பி.முத்துராமனும் விதிவிலக்கு அல்ல. அப்படி அவர் வாழ்நாளில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

Pandian Movie
Pandian Movie

1992 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், குஷ்பு, ஜனகராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பாண்டியன்”. இத்திரைப்படத்தை எஸ்.பி.முத்துராமன் தயாரித்து இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எதிர்பாராவிதத்தில் எஸ்.பி.முத்துராமனின் மனைவி மறைந்துவிட்டார்.

எனினும், அவர் மனைவி இறந்த அடுத்த நாளே, படப்பிடிப்பிற்கு வந்துவிட்டார் முத்துராமன். இதனை பார்த்த படக்குழுவினர் அவரிடம் “நேற்றுத்தானே உங்கள் மனைவி இறந்தார்கள். கொஞ்ச நாள் படப்பிடிப்பை தள்ளிப்போடுங்கள்” என கூறியிருக்கிறார்கள்.

அதற்கு எஸ்.பி.முத்துராமன் “இதுவரையில் நான் எந்த திரைப்படத்தையும் எந்த காரணத்திற்காகவும் தள்ளிப்போட்டதில்லை. எந்த தேதியில் படம் வெளியாக வேண்டும் என்று முடிவெடுத்தேனோ அன்றே நான் அந்த படத்தை வெளியிட்டுவிடுவேன். இது எனது யூனிட்டில் உள்ள தொழிலாளர்களுக்காக நான் உருவாக்குகிற திரைப்படம். இத்திரைப்படம் தள்ளிபோவது சரியாக வராது. ஆதலால்தான் இன்று படப்பிடிப்பிற்கு வந்தேன். வாருங்கள் தொடங்குவோம்” என கூறினாராம்.

SPMuthuraman
SPMuthuraman

எஸ்.பி.முத்துராமன் தன்னுடன் பல திரைப்படங்களில் பணியாற்றிய படக்குழுவினரின் பொருளாதார நலனுக்காக பிரத்யேகமாக தயாரித்த திரைப்படம்தான் “பாண்டியன்”. இந்த காரணத்திற்காகத்தான் ரஜினிகாந்த்தும் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

தனது மனைவி இறந்ததை காரணம் காட்டி படப்பிடிப்பை தள்ளிப்போடுவது என்பது தனது படக்குழுவினருக்குத்தான் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் முத்துராமன் என்பதைத்தான் இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது.

google news