சூர்ய பகவானின் திருவிளையாடலால் நடன இயக்குனராக மாறிப்போன ஸ்ரீதர்… இப்படி எல்லாம் நடந்திருக்கா!!

Sridhar
1967 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, முத்துராமன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஊட்டி வரை உறவு”. இத்திரைப்படத்தை ஸ்ரீதர் இயக்கியிருந்தார். கோவை செழியன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது சூரியனால் ஏற்பட்ட பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

Sridhar
“ஊட்டி வரை உறவு” திரைப்படத்தின் படப்பிடிப்பை ஊட்டியில் நடத்த முடிவு செய்த படக்குழுவினர், மொத்த நடிகர் நடிகைகளையும் அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு புறப்பட்டனர். ஆனால் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. ஏனென்றால் சூரியனே வெளிவரவில்லையாம்.
இவ்வாறு தினமும் படப்பிடிப்பு நடத்தமுடியாமல் நாட்கள் நகர்ந்துகொண்டே இருக்க, நடிகர், நடிகைகளின் கால்ஷீட் நாட்களும் வீணாகிக்கொண்டே இருந்தது. ஆதலால் அனைவரும் புறப்பட்டு சென்னை திரும்பிவிட்டனர். அதன் பின் மீண்டும் நடிகர் நடிகைகளிடம் கால்ஷீட் வாங்கிக்கொண்டு செப்டம்பர் மாத இறுதியில் மீண்டும் படக்குழுவினர் ஊட்டிக்கு கிளம்பினர்.
இந்த முறை சூரியன் மிக பிரகாசமாக இருந்தது. மேலும் முதலில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட இருந்தது. ஆனால் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன், வேறு படப்பிடிப்பில் மாட்டிக்கொண்டதால் அவரால் வரமுடியவில்லையாம். சூரிய வெளிச்சம் மிகப் பிரகாசமாக இருந்ததால் எந்த நிமிடமும் தாமதிக்கக்கூடாது என ஸ்ரீதர் நினைத்தார். ஆதலால் ஒரு அதிரடி முடிவெடுத்தார் ஸ்ரீதர்.

Ooty Varai Uravu
அதாவது அந்த பாடலுக்கு அவரே நடனம் அமைக்க முடிவெடுத்தார். இந்த முடிவை கண்டு படக்குழுவினர் பலரும் வியந்துபோயினர். எனினும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனே நடனமாட தொடங்கினாராம் ஸ்ரீதர். அப்படி அவர் நடனம் அமைத்த பாடல்தான் “பூ மாலையில் ஓர் மல்லிகை” என்ற மிகப்பிரபலமான பாடல்.