Cinema History
தமிழ்ப்படங்களில் அடுக்குமொழி வசனம் பேசி அசத்தும் ஒரே நடிகர் டி.ராஜேந்தரின் நவரசம் ததும்பும் படங்கள் – ஓர் பார்வை
நவரசங்களும் நிறைந்து இருக்கும் படங்கள் யாருடையது என்றால் சந்தேகமே இல்லாமல் இயக்குனர் டி.ராஜேந்தரின் படங்கள் என்று சொல்லலாம்.
கோபம், அழுகை, சென்டிமென்ட், அமைதி, கேலி, நகைச்சுவை, காதல், வீரம், கொடை என நவரசங்களும் கலந்து இருக்கும். இவரது படங்கள் அனைத்துமே தாய்மார்கள் கொண்டாடும் விதத்தில் அமைந்திருக்கும்.
தமிழ்ப்படங்களில் அடுக்குமொழி வசனம் பேசி அசத்தும் ஒரே நடிகர் இவர் தான். அதுவும் ஸ்டைலாக பேசுவார் சண்டைக்காட்சியிலும் கூட. வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி, உன் தோலை உரிச்சி போட்டுடுவேன் பஜ்ஜி என இவர் பேசும் வசனம் இன்று பார்த்தாலும் நம்மை ரசிக்க வைக்கும். இவர் ஒரு இசைப்பிரியர். வாயாலேயே மியூசிக் போட்டு விடுவார். அந்தளவு ரசனை மிக்கவர். அண்ணன் தங்கை பாசத்தைக் கொட்டுவதில் இவரை மிஞ்ச ஆள் இல்லை.
இவரது படங்களில் பேசப்படும் மற்றொரு விஷயம் செட்டிங். இசையிலும் இவர் கவனம் செலுத்துவதால் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகிவிடுகின்றன. இன்னொரு முக்கியமான விசேஷம் என்னவென்றால் இவரது படங்களின் தலைப்புகள் அனைத்துமே 9 எழுத்துகளைக் கொண்டதாக அமைந்திருக்கும். இவற்றில் ஒரு சில சூப்பர்ஹிட் படங்களைப் பார்ப்போம்.
என் தங்கை கல்யாணி
1988ல் வெளியான இந்தப்படத்தை டி.ராஜேந்தர் இயக்கினார். நடிப்பு, இசை, தயாரிப்பு என அத்தனை துறைகளையும் அவரே வழக்கம்போல கவனித்துக் கொண்டார்.
இந்தப்படத்தில் இவரது மகன் சிலம்பரசனும், மகள் தமிழ் இலக்கியாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சுதா, மாஸ்டர் கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன், சிவராமன், தியாகு, பபிதா, ஸ்ரீவித்யா உள்பட பலர் நடித்துள்ளனர்.
தேகம் சுடுகுது வாடி, தங்கச்சிக்கு சீமந்தம், பூ ஒன்று வளர்த்தேன், விரதத்தில் நானும், எல்லாமே என் தங்கச்சி, என் வாழ்க்கை சேலை போல, தோள் மீது தாலாட்ட, தன்னந்தனி காட்டுக்குள்ள, பூ வாங்கி வந்த நேரம், போட்டானே மூணு முடிச்சுத்தான் ஆகிய நவரசம் கொட்டும் பாடல்கள் நிறைந்த படம்.
உயிருள்ளவரை உஷா
1983ல் டி.ராஜேந்தர் இயக்கி, நடித்து, இசை அமைத்து, தயாரித்து வெளியான படம். கல்லூரி மாணவர்கள் அந்தக்காலத்தில் இந்தப்படத்திற்கு கட் அடித்து விட்டு வருவார்கள்.
நளினி, எஸ்.எஸ்.சந்திரன், கங்கா, கவுண்டமணி, ராதாரவி, மூர்த்தி, காந்திமதி, சரிதா உள்பட பலர் நடித்துள்ளனர். படம் பட்டிதொட்டி எங்கும் வெற்றி பெற்று சக்கை போடு போட்டது.
உன்னைத்தானே, இந்திரலோகத்து, வைகை கரை காற்றே, மோகம் வந்து, கட் அடிப்போம், இதயமதை கோவில் என்றேன் ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.
மைதிலி என்னை காதலி
1986ல் வெளியான இந்தப்படத்தை டி.ராஜேந்தர் இயக்கினார். நடித்து, கதை எழுதி, தயாரித்து, இசை அமைத்து என சகலகலா வல்லவராகவே வழக்கம்போல இந்தப்படத்திலும் இயங்கியுள்ளார். அவருடன் இணைந்து ஸ்ரீவித்யா, அமலா, செந்தாமரை, எஸ்.எஸ்.சந்திரன், உசிலைமணி, தியாகு, சிலம்பரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் அமலா அறிமுகமாகியுள்ளார்.
அட பொன்னான மனசே, எங்கும் மைதிலி, என் ஆசை காதலியே, கண்ணீரில் மூழ்கும், மயில் வந்து, பாவாடை ஆகிய பாடல்கள் உள்ளன.
ஒரு தாயின் சபதம்
டி.ராஜேந்தர் நடித்து, இசைத்து, தயாரித்து, இயக்கிய படம். அவருடன் ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர், எஸ்.எஸ்.சந்திரன், சிலம்பரசன், குட்டிபத்மினி, பபிதா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படம் 1987ல் வெளியானது. சொல்லாமத்தானே, சாரல் காத்துலதான், ராக்கோழி கூவையிலே, எனது கானம், அம்மாடியோவ், ஆத்தாடியோவ், அட காதலிச்சா போதாது, மகனே நீ உறங்க, தர்மந்தான் ஜெயிக்குமுங்க ஆகிய பாடல்கள் உள்ளன.
தங்கைக்கோர் கீதம்
1983ல் வெளியான இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. டி.ராஜேந்தர் வழக்கம்போல கதை, திரைக்கதை, இயக்கம், இசை, நடிப்பு, தயாரிப்பு என அனைத்துத் துறைகளிலும் கால்தடம் பதித்து படத்தை வெற்றிப்பாதையை நோக்கி செலுத்தினார்.
அவருடன் இணைந்து சிவகுமார், ஆனந்த்பாபு, நளினி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் பாடல்களோ பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. தினம் தினம் உன் முகம், இது ராத்திரி நேரம், பகலென்றும் இரவென்றும், தட்டிப்பார்த்தேன், தஞ்சாவூரு மேளம், தங்க நிலவே ஆகிய அமுதமான பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன.