
Cinema News
சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துவிட்டு காணாமல் போன 6 இயக்குனர்கள்.. இப்படி ஆகிப்போச்சே!…
திரையுலகில் சில இயக்குனர்கள் மட்டுமே பல காலங்கள் தாக்கு பிடிப்பார்கள். 30, 40 வருடங்கள் எல்லாம் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, கே.விஸ்வநாத் என மிகவும் சிலரே அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பார்கள். சில இயக்குனர்கள் பத்து, பதினைந்து வருடங்கள் தாக்குபிடிப்பார்கள். சில இயக்குனர்கள் ஒரே படத்திலேயே கூட காணாமல் போய்விடுவார்கள்.
சில இயக்குனர்கள் கவனிக்கத்தக்க சில சிறப்பான திரைப்படங்களை இயக்குவார்கள். அவர்களின் திரைப்படங்களுக்கு என ரசிகர்களே உருவாகுவார்கள். ஆனால், அதன்பின் அவரின் இயக்கத்தில் வரும் திரைப்படங்கள் கவனத்தை பெறாது அல்லது படங்களை இயக்குவதையே அவர்கள் நிறுத்திவிடுவார்கள். அப்படிப்பட்ட சில ஆறு இயக்குனர்கள் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

balaji sakthivel
பாலாஜி சக்திவேல்:
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான பாலாஜி சக்திவேல் இயக்கிய முதல் திரைப்படமான சாமுராய் தோல்வியை தழுவியது. ஆனால், ‘காதல்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அடுத்து இயக்கிய கல்லூரி திரைப்படம் தோல்வி அடைந்தது. ஆனால், ‘வழக்கு எண் 18/9’ வெற்றியடைந்தது. ஆனால், இந்த 4 படங்களுக்கு பின் அவர் இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை. நடிகராக மாறி அசுரன், மகான், பொன்னியின் செல்வன், சர்தார், காரி ஆகிய படங்களில் நடித்தார். இவரின் இயக்கத்தில் எப்போது படம் வெளியாகும் என நல்ல சினிமாவை விரும்பும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

vasantha balan
வசந்த பாலன்:
இவரும் ஷங்கரின் உதவியாளர்தான். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ஆல்பம். இப்படம் வரவேற்பை பெறவில்லை. அதன்பின் 4 வருடங்கள் கழித்து ‘வெயில்’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தார். இப்படம் சில விருதுகளையும் பெற்றது. அதேபோல், அங்காடித்தெரு திரைப்படமும் சிறந்த திரைப்படமாக அமைந்து விருதுகளை பெற்றது. ஆனால், அடுத்து அவர் இயக்கிய அரவாண், காவிய தலைவன், ஜெயில் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை. தற்போது ஒரு வெற்றிப்படத்திற்காக காத்திருக்கிறார்.

sj suriya
எஸ்.ஜே.சூர்யா:
அஜித்தை வைத்து இவர் இயக்கிய முதல் திரைப்படமான ‘வாலி’ சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. பாக்கியராஜ் போல் தான் இயக்கும் படங்களில் கிளுகிளுப்பான வசனம் மற்றும் காட்சிகளை வைப்பது இவரின் வழக்கம். அடுத்து விஜய் – ஜோதிகாவை வைத்து அவர் இயக்கிய குஷி திரைப்படமும் சூப்பர் ஹிட். ஆனால், அதன்பின் அவர் இயக்கும் படங்களில் அவரே நடிக்க துவங்கினார். அங்குதான் அவரின் சறுக்கல் துவங்கியது. நியூ, அஆ, இசை ஆகிய படங்களை அவரே இயக்கி நடித்தார். ஆனால், அப்படங்கள் ஓடவில்லை. அதன்பின் நடிகராக மாறினார். தற்போது வில்லனாக பல படங்களில் கலக்கி வருகிறார். எஸ்.ஜே.சூர்யா என்கிற நடிகரை ரசித்தாலும் அவர் இயக்குனராக எப்போது மாறுவார் என இவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

karthick
கார்த்திக் சுப்பாராஜ்:
ஐடி துறை வேலையை விட்டுவிட்டு குறும்படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பாராஜ். பீசா திரைப்படம் மூலம் கவனிக்க வைத்தவர். அடுத்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் மூலம் முழுமையான இயக்குனராக மாறினார். இப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால், அதன்பின் அவர் இயக்கிய இறைவி, ஜகமே தந்திரம், மெர்குரி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை. ரஜினியை வைத்து இயக்கிய பேட்ட திரைப்படம் மட்டும் ஓரளவுக்கு ஓடியது.

susindran
சுசீந்திரன்:
வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் சுசீந்திரன். அதன்பின் அவர் இயக்கிய நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு என இவர் இயக்கிய 4 திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களை கவர்ந்தது. இந்த படங்கள் இல்லாமல் 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

Ameer
அமீர்:
இயக்குனர் பாலாவின் உதவியாளரான அமீர் மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் இயக்குனராக திரையுலகில் நுழைந்தவர். முதல் திரைப்படத்திலேயே ரசிக்க வைத்தார். அதன்பின் இயக்கிய ராம் திரைப்படமும் ரசிகர்களுக்கு பிடித்தது. ஆனால், அவர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் கோலிவுட்டையே திருப்பி போட்டது. அந்த படத்தின் பாதிப்பில் பல திரைப்படங்கள் வெளிவந்தது. அதன்பின் ஜெயம் ரவியை வைத்து ‘ஆதி பகவான்’ படத்தை இயக்கினார். அப்படம் ரசிகர்களை கவரவில்லை. அதன்பின் 10 வருடங்களாக அமீர் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. ஆனால், வட சென்னை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவரும் எப்போது அடுத்த படத்தை இயக்குவார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.