மணிரத்னத்தை மரத்தடியில் கால்கடுக்க நிற்க வைத்த இளையராஜா… இப்படியெல்லாம் நடந்துருக்கா?

இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனராக திகழ்ந்து வரும் மணிரத்னம், முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “பல்லவி அனு பல்லவி” என்ற கன்னட திரைப்படமாகும். இத்திரைப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் “உணரு” என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன் பின் தமிழில் அவர் இயக்கிய முதல் திரைப்படம் “பகல் நிலவு”. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து “மௌன ராகம்”, “நாயகன்”, “அக்னி நட்சத்திரம்” ஆகிய வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.

சிறிய சிறிய வசனங்கள், இருள் நிரம்பிய ஒளிப்பதிவு, உலகத் தரமான மேக்கிங் என்று சினிமா ரசிகர்களை பிரம்மிப்பூட்டும் வகையில் திரைப்படங்களை உருவாக்கிய மணிரத்னம், “ரோஜா” திரைப்படத்திற்கு பிறகு பேன் இந்திய இயக்குனராக ஆனார். “ரோஜா” திரைப்படத்தில்தான் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானார் என்பதை பலரும் அறிவார்கள்.

கால் கடுக்க நிற்க வைத்த இளையராஜா

தனது முதல் திரைப்படத்தில் இருந்து “தளபதி” திரைப்படம் வரை இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய மணிரத்னம், அதன் பின் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைக்கோர்த்தார். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, மணிரத்னத்திற்கும் இளையராஜாவுக்கும் இருந்த உறவு முறிந்தது குறித்து தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதாவது பாலச்சந்தர் தயாரிக்கும் திரைப்படத்தை மணிரத்னம் இயக்குவதாக இருந்தது. அப்போது இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு மணிரத்னம் சென்றாராம். அங்கே இளையராஜாவுக்கும் மணிரத்னத்திற்கும் வாக்குவாதம் எழ மணிரத்னத்தை ஸ்டூடியோவுக்கு வெளியே உள்ள மரத்தடியில் நிற்க வைத்துவிட்டாராம்.

இந்த விஷயம் பாலச்சந்தருக்கு தெரியவர, பாலச்சந்தர் ஸ்டூடியோவிற்கு வந்து மணிரத்னத்தை காரில் ஏற்றிச்சென்றிருக்கிறார். அப்போது இருவரும் புது இசையமைப்பாளர் ஒருவரை அறிமுகப்படுத்தலாம் என்று முடிவெடுத்தனர். அவ்வாறு இளையராஜாவிடம் பணியாற்றிக்கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மானை தேர்ந்தெடுத்திருக்கிறார் பாலச்சந்தர். இவ்வாறுதான் “ரோஜா” திரைப்படத்தில் அறிமுகமாகினாராம் ஏ.ஆர்.ரஹ்மான். இவ்வாறு அந்த பேட்டியில் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

 

Related Articles

Next Story