Cinema History
80களில் சொக்க வைத்த நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளைத் தந்த தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை
மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு நினைவுகள் நம்மை அசை போட வைத்துக் கொண்டே இருக்கும். அவை சுகமாகவும், சில சோகமாகவும் என்று மாறி மாறி வந்து நம்மை அலைகழிக்கும்.
சுகமான நினைவுகளையே மனம் நாடும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் நம் சுகமான நினைவுகளை சுமந்து வந்த ஒரு சில சுவாரசியமான தமிழ்ப்படங்கள் உள்ளன. அவற்றில் 80களில் சொக்க வைத்த நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளைத் தந்த இங்கு பார்ப்போம்.
நினைக்கத் தெரிந்த மனமே
1987ல் வெளியான இப்படத்தை இயக்கியவர் சுரேஷ். மோகன், ரூபினி, சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின.
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல், இளமை ரதத்தில் இயற்கை, எங்கெங்கு நீ சென்ற போதும், சின்ன சின்ன முத்து நீரிலே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
நினைவே ஒரு சங்கீதம்
1987ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் கே.ரங்கராஜ். கதை, திரைக்கதையை செல்வகுமார் எழுதியுள்ளார். விஜயகாந்த், ராதா, ஸ்ரீவித்யா, ரேகா, கவுண்டமணி, கோவை சரளா, ரவிச்சந்திரன், ராதாரவி, சேது விநாயகம் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் ஏத்தமய்யா ஏத்தம், பகலிலே ஒரு நிலவினை கண்டேன், எடுத்த வச்ச, சந்த கடை ஆகிய பாடல்கள் மனதில் நிற்கும் ரகங்கள்.
உறங்காத நினைவுகள்
1983ல் வெளியான இப்பட்ததை ஆர்.பாஸ்கரன் தயாரித்து இயக்கியுள்ளார். சிவகுமார், மேனகா, ராதிகா, ராஜீவ், சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் ரம்மியமாக இருந்தன.
நறுமண மலர்களின், அர்த்த ராத்திரி, மௌனமே நெஞ்சில், பாடு பாட்டு ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப்படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் பாலுமகேந்திரா. இவரது ஒளிப்பதிவில் அனைத்துப்படங்களுமே செம மாஸாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நினைவெல்லாம் நித்யா
1982ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ஸ்ரீதர். கார்த்திக், ஜீஜி, திலீப், நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் நடித்துள்ள ஹீரோயின் யார் என்றால் காதல் மன்னன் ஜெமினிகணேசனின் மகள் ஜீஜி. படத்தில் நித்யா கேரக்டரில் வெகு அருமையாக நடித்துள்ளார்.
இளையராஜாவின் இன்னிசையில் கானல் நீர் போல், கன்னி பொண்ணு, நீ தானே எந்தன், நினைவெல்லாம் நித்யா, பனிவிழும் மலர்வனம், ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், தோளின் மேலே ஆகிய பாடல்கள் அந்த காலத்தில் இளைஞர்களை சுண்டி இழுத்தன.
நினைவுச்சின்னம்
1989ல் வெளியான சூப்பர்ஹிட் படம். அனுமோகனின் இயக்கத்தில் சக்ரபாணி தயாரித்திருந்தார். இந்தப்படத்தில் இளையதிலகம் பிரபுவும், முரளியும் இணைந்து நடித்து இருந்தனர். அவர்களுடன் ராதிகா, சித்ரா, விஜயகுமார், கவுண்டமணி, செந்தில், எஸ்.எஸ்.சந்திரன் உள்பட பலர் நடித்து இருந்தனர்.
ஏலே இளங்கிளியே, வைகாசி மாசத்துல, சோறுதின்னு, ஊருக்குள்ள உன்ன, ஊரெல்லாம் தூங்குது, சிங்கார சீமையிலே ஆகிய பாடல்கள் உள்ளன.