சிறுவனாக கமல் பார்த்த முதல் ஷூட்டிங்!.. நடித்த முதல் காட்சி!.. ஒரு பிளாஷ்பேக்!...

#image_title
Kamalhaasan: 4 வயது முதல் திரைப்படங்களில் நடித்து வருபவர் கமல்ஹாசன். அப்படிப்பார்த்தால் அவரின் சினிமா அனுபவம் 66 வருடங்கள். சின்ன சின்ன வேடங்கள், நடன இயக்குனர், ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என சினிமாவில் பல அவதாரங்களை எடுத்தவர் கமல்.
இன்னும் எத்தனை நடிகர்கள் வந்தாலும் கமலின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. அதேபோல், அவர் செய்ததை யாராலும் செய்துவிடவும் முடியாது. அப்படிப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பரமக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனிவாசன், ராஜலட்சுமி தம்பதியின் இளையமகன்தான் பார்த்தசாரதி எனும் கமல்ஹாசன்.
அதாவது அவருக்கு முதலில் வைத்த பெயர் பார்த்தசாரதி இது பலருக்கும் தெரியாது. முதல் படமே ஏவிஎம் தயாரிப்பில் உருவான களத்தூர் கண்ணம்மா. அதுவும் அப்போது முக்கிய நடிகராக இருந்த ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரிக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு. சிறு வயதிலேயே நடிப்பின் மீது கமலுக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தது.
அந்த படத்தில் இடம் பெற்ற ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ பாடலை ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே படமாக்கியிருந்தனர். கமலின் நடிப்பு ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பிடித்துப்போகவே அந்த காட்சியை மேலும் நீட்டித்து 3 நிமிடங்கள் வரை படமாக்க சொல்லியிருக்கிறார்.

Kalathur Kannamma
கமல் முதன் முதலில் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு போன போது களத்தூர் கண்ணம்மாவில் இடம் பெற்ற ‘கண்களின் வார்த்தைகள் புரியாதோ’ பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். இதுதான் கமல் பார்த்த முதல் ஷூட்டிங். அதேபோல், அந்த படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரி அவருக்கு உப்புமாவை ஊட்டிவிடும் காட்சிதான் கமல்ஹாசன் தனது திரைவாழ்வில் முதன் முதலாக நடித்த காட்சியாகும்.
சிறுவயதிலேயே ஜெமினி கணேசன், சாவித்ரி, சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் என முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்தார் கமல், இந்த வாய்ப்பு எந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அந்த மேக்கப் கிட் 2 லட்சம் இருக்கும்.. ஃப்ரீயா கொடுத்த கமல்! யாருக்கு தெரியுமா?