தமிழ்த்திரையுலகில் எத்தனை எத்தனை ஜாம்பவான்கள் உள்ளனர் என்று வியக்க வைக்கிறது. ஒருவர் நடிப்பில் புலி என்றால் இன்னொருவர் பாட்டெழுதுவதில் புலி. இன்னொருவர் நகைச்சுவையில் சூரப்புலி. ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. அவரவர் துறையில் அவர்கள் புலி தான் என்று அவ்வப்போது நிரூபிக்கிறார்கள். அப்படித்தான் இந்த சம்பவமும். வாங்க பார்க்கலாம்.

‘சோ’ என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அவரது நகைச்சுவைக் கலை தான். மனுஷன் அசால்டா சிக்ஸ் அடிப்பாரு ஜோக் சொல்றதுலன்னே சொல்லலாம்.நிறைகுடம் என்ற படத்திற்கு கதை எழுதியவர் இயக்குனர் மகேந்திரன். இயக்கியவர் முக்தா சீனிவாசன். வசனம் எழுதியவர் சோ. படத்தில் ஒரு காட்சியில் சிவாஜி கதாநாயகி வாணிஸ்ரீயிடம் கவிதை நடையில் வசனம் பேச வேண்டும். அப்போது இயக்குனர் முக்தா சீனிவாசன் சோவை அழைத்து இது முக்கியமான சீன். பிரமாதமா கவிதை எழுதுடான்னு சொல்றாரு. சிவாஜியும் கலக்கிருடா’ன்னு சொல்றாரு.

சோவும் ‘கவலையேப் படாதீங்க. கலக்கிடுறேன்’னு சொல்றாரு. மறுநாள் அந்தக் காட்சியை எடுக்க படக்குழு தயாராகிறது. சிவாஜியிடம் அந்த கவிதை பேப்பர் வருகிறது. சோவை அப்படியே ஏற இறங்கப் பார்த்தார் சிவாஜி. எழுதியது போலவே அதற்கேற்ப அட்டகாசமாக நடித்துக் கொடுத்தார் சிவாஜி. காட்சி முடிந்ததும் சோவை வரச்சொல்லுப்பான்னு சிவாஜி அழைக்க சோ வந்தார்.

உடன் இயக்குனரும் இருந்தார். இந்த வசனக்கவிதையை இவன் எழுதல. அநேகமா கவிஞர் கண்ணதாசன்கிட்டதான் எழுதி வாங்கிட்டு வந்துருக்கான். சரியான்னு செல்லமான அதட்டலுடன் சிவாஜி கேட்டார். சோவும் சிறிதும் ஐயய்யோ கண்டுபிடிச்சிட்டாங்களேன்னு பயப்படவில்லை.

ஆமாம். அதுக்கென்ன…? ஜாலியா எழுதுறவன்கிட்ட கவிதையாக் கேட்டா என்ன அர்த்தம்? அதான் நம்ம கவிஞர்கிட்ட காட்சியைச் சொல்லி அஞ்சே நிமிஷத்துல வாங்கி வந்துட்டேன்னு சோ சொல்கிறார். சோ அப்படி சொன்னதும் சிவாஜி உள்பட அங்கிருந்த எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *