இளையராஜாவுக்காக13 படங்களை தவறவிட்ட இயக்குனர்.. பதிலுக்கு இசைஞானி செஞ்சதுதான் ஹைலைட்

by ராம் சுதன் |
இளையராஜாவுக்காக13 படங்களை தவறவிட்ட இயக்குனர்.. பதிலுக்கு இசைஞானி செஞ்சதுதான் ஹைலைட்
X

இசை மாமேதை இளையராஜா. கிட்டத்தட்ட சினிமா உலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் கால் பதித்து தன்னுடைய அசாத்திய திறமையால் உலக அளவில் புகழப்படும் ஒரு இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். அதோடு தனது சிம்பொனி இசையை லண்டனில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் இளையராஜா. அதற்காக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் நேரடியாக இளையராஜா வீட்டிற்கு சென்று அவருடைய வாழ்த்தை தெரிவித்து இருந்தார். எவ்வளவோ சாதனைகளை படைத்திருந்தாலும் இன்னும் இசையில் ஏதாவது புதிய சாதனையை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறார் இளையராஜா. ஆரம்ப காலங்களில் இவருடைய இசை இல்லாமல் பெரும்பாலான படங்கள் வந்ததே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .

ரஜினி, கமல், பிரபு ,சத்யராஜ் ,கார்த்திக் என அத்தனை நடிகர்களின் படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு இன்னொரு காரணமாக இருந்தது இளையராஜாவின் இசை. சில நேரங்களில் இவருடைய இசையால் பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ இல்லையோ இவரின் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க முன் வந்திருக்கின்றனர்.

ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசையமைக்கும் அசாத்திய திறமை கொண்டவராகவும் இருந்திருக்கிறார் இளையராஜா. அவரைப் பற்றி சமீப காலமாக பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. மிகவும் கோபக்காரர் ,கடுமையானவர் என்றெல்லாம் பல வகைகளில் அவரை விமர்சித்து வருகின்றனர். அதோடு தனது காப்பிரைட்ஸ் உரிமையிலும் எதற்கும் விட்டுக் கொடுக்காதவராக இருந்து வந்தார் இளையராஜா.

இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான ஜி எம் குமார் இளையராஜாவுக்கும் தனக்கும் இருந்த நட்பை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஜி எம் குமார் இயக்கிய திரைப்படம் அறுவடை நாள். அந்த படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. அந்தப் படத்தில் இவர் இசையமைத்த ஒரு பாடலை டைட்டில் கார்டில் போட்டு விட அதற்கு இளையராஜா கோபப்பட்டார் என்று ஜி எம் குமார் ஒரு பேட்டியில் கூறினார்.

இந்த படத்தில் இளையராஜா இசை அமைத்த பிறகு ஜிஎம் குமாருக்கு தொடர்ந்து 13 படங்களை இயக்கக்கூடிய வாய்ப்பு வந்ததாம் .ஆனால் அந்த 13 படங்களின் தயாரிப்பாளர்களும் இளையராஜா வேண்டாம் என்று கூறி இவருடைய கால்சீட்டை கேட்டார்களாம். ஏனெனில் அப்போது இளையராஜாவுக்கும் அந்த தயாரிப்பாளர்களுக்கும் இடையில் சில ஈகோ பிரச்சனை இருந்ததனால் இளையராஜாவை அவர்கள் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லையாம்.

ஆனால் ஜி எம் குமார் இந்த 13 படங்களிலும் இளையராஜா வேண்டாம் என்றால் அந்த 13 படங்களே வேண்டாம் என வந்த வாய்ப்பை தட்டிக் கழித்து விட்டாராம் .இது எப்படியோ இளையராஜாவுக்கு தெரிந்திருக்கிறது. அதன்பிறகு ஒரு நாள் தயாரிப்பாளர் கே ஆர் ஜி இளையராஜாவை சந்தித்து ஒரு படத்தில் இசையமைக்கும்படி கால்ஷீட் கேட்க வந்திருக்கிறார். அப்போது இளையராஜா அந்த படத்திற்கு குமாரை இயக்குனராக போடுங்கள் என்று சொன்னாராம்.

அதற்கு கே ஆர் ஜி ஜிஎம் குமார் வேண்டும் என்றால் நீயே வேண்டாம் என இளையராஜாவை ஒதுக்கிவிட்டு போய்விட்டாராம். இதை ஜி எம் குமாரிடம் இளையராஜா சொல்லும்போது நீ எனக்காக 13 படங்களை விட்டுக் கொடுத்த. உனக்காக ஒரு படத்தை விட்டுக் கொடுத்தேன் என கிண்டலாக கூறினாராம்.

Next Story