Categories: latest news

Flash Back: ரசிகர்கள் அளவுகடந்த உற்சாகம்… ஆபரேட்டர் அறையில் போய் ஒளிந்த ஜெய்சங்கர்…!

ஜெய்சங்கருக்கு எந்த ஆண்டு தனது படம் வெளியாகிறதோ அதுதான் தலை தீபாவளி. 1966ல் ஜேம்ஸ்பாண்டாக நடித்த வல்லவன் ஒருவன் படம் ஜெய்சங்கரின் திரையுலக வாழ்வில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். தமிழில் வெளியான முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் இதுதான்.

தனது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ரிசல்ட் எப்படி இருக்குன்னு தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றுள்ளார் ஜெய்சங்கர். ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டம். அளவு கடந்த உற்சாகம். என்னை ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டால் படத்தை இன்டர்வெல்லுக்கு அப்புறம் நிம்மதியா பார்க்க முடியாது. அதனால் இன்டர்வெல்லுக்கு சிறிது நேரம் முன்பாகவே ஆபரேட்டர் அறையில் போய் ஜெய்சங்கர் ஒளிந்து கொண்டாராம்.

அப்படி இருந்தும் அந்தத் தியேட்டரில் நான் படம் பார்த்தது ரசிகர்களுக்கு எப்படியோ தெரிந்து விட்டது. ஆபரேட்டர் அறையை ரசிகர்கள் சூழ்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அவங்ககிட்ட இருந்து தப்பிச்சி நான் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி தப்பித்து வீட்டுக்குப் போனேன்.

அப்போ அந்த ஆட்டோ டிரைவர் ‘என்ன சார் படத்துல எல்லாம் நடிக்கிறீங்க… ஒரு கார் வாங்கி இருக்கக்கூடாதா?’ என கேட்டார். அந்தக் கேள்வி இன்று வரையில் என் மனதில் நிலைத்து இருக்கிறது என ஒரு பத்திரிகை பேட்டியில் ஜெய்சங்கர் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

1966ல் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய படம் வல்லவன் ஒருவன். ஜெய்சங்கர், எல்.விஜயலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். வேதா இசை அமைத்துள்ளார். படத்தில் ஜெய்சங்கர் ஜேம்ஸ்பாண்டு மாதிரி குற்றப்புலனாய்வு அதிகாரி சங்கராக நடித்துள்ளார். தேங்காய்சீனிவாசன், மனோகர், விஜயலலிதா உள்பட பலர் நடித்துள்ளனர். கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். அம்மம்மா கன்னத்தில், பளிங்கினால் ஒரு மாளிகை, தொட்டு தொட்டு பாடவா, இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால், முத்துப் பொண்ணு வாமா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Published by
sankaran v