இவன் பல பேர காலி பண்ணப் போறான்!.. வைரமுத்துவை பாராட்டிய இளையராஜா!...

by சிவா |
இவன் பல பேர காலி பண்ணப் போறான்!.. வைரமுத்துவை பாராட்டிய இளையராஜா!...
X

Vairamuthu: கவிஞர், பாடலாசிரியர் என ரசிகர்களிடம் பிரபலமானவர் வைரமுத்து. மண்வாசனை மிக்க பாடல் வரிகளை எழுதியவர் இவர். குறிப்பாக பாரதிராஜா, இளையராஜா கூட்டணியில் உருவான மண்வாசனை, கடலோர கவிதைகள், முதல் மரியாதை உள்ளிட்ட சில படங்களில் அசத்தலான பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் இளையராஜாவுக்கும் அவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் இப்போதுவரை இருவரும் சேரவே இல்லை.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேட்டிகொடுத்த போது ‘வைரமுத்துவை எப்படி கண்டுபிடித்தீர்கள்?’ என பாரதிராஜாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்:

நான் நிறம் மாறாத பூக்கள் படத்திற்காக லொகேஷன் பார்க்க சென்றபோது உமரால்டு என்கிற ஓவியன் என்னை பார்க்க வந்தான். என் படத்திற்கு போஸ்டர் டிசைன் எல்லாம் அவன்தான் வரைந்து கொடுப்பான். அவனுடன் ஒல்லியாக இருந்த ஒருவனும் வந்திருந்தான். ‘இவர் நல்ல கவிஞர்.. நன்றாக பாடல்களை எழுதுவார்’ என வைரமுத்துவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

வைரமுத்து தன் கையில் அவர் எழுதிய திருத்தி எழுதிய தீர்ப்புகள் புத்தகத்தை வைத்திருந்தார். அதை என்னிடம் கொடுத்து ‘முடிந்தால் என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என சொன்னார். வாய்ப்பு கேட்டு வரும் இவன் இவ்வளவு திமிறாக இருக்கிறானே? என நினைத்தேன். விமானத்தில் செல்லும்போது அந்த புத்தகத்தை வாசித்து பார்த்தேன்.

படிக்க படிக்க எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மதுரை மண்ணின் வாசம், மலை, இயற்கை என எல்லாம் நேட்டிவிட்டி அற்புதமாக இருந்தது. அடுத்து நிழல்கள் படத்தை இயக்கியபோது கம்போசிங்கிற்காக இளையராஜாவுடன் அமர்ந்திருந்தபோது ‘ஒரு புதிய கவிஞரை அறிமுகம் செய்வோமா?’ என இளையராஜா என்னிடம் கேட்டான். ஏனெனில் அப்போதுவரை எங்களுக்கு கண்ணதாசன்தான் எழுதி வந்தார்.

அப்போது வைரமுத்து பற்றி அவனிடம் சொன்னேன். அப்போது வைரமுத்து அரசு துறையில் மொழிபெயர்ப்பாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவரை வர சொன்னேன். அவர் வந்ததும். சந்தத்திற்கு வரிகளை எழுதவேண்டும். உங்களால் முடியுமா என கேட்டான். வைரமுத்து முடியும் என சொல்ல இளையராஜாவுக்கு நம்பிக்கை வரவில்லை. முயற்சி செய்து பார்ப்போம் என சொல்லி ராஜாவை டியூனை வாசித்து காட்ட சொன்னேன்.

தானானா தனன்னா என ராஜா வாசித்து காட்டி வைரமுத்து மேலே பார்த்தான். சட்டென ‘பொன் மாலை பொழுது.. இது ஒரு பொன் மாலை பொழுது’ என சொன்னான். பாடிப்பார்த்த இளையராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி. உடனே, வைரமுத்துவிடம் ‘நீங்கள் வெளியே காத்திருங்கள்’ என்றான்.

சரி வைரமுத்துவை தூக்கிவிட்டான் என நினைத்தேன். அவன் சென்றபின் என்னிடம் ‘யோவ் பயங்கரமான ஆளா இருக்கான்யா. பெரிய பெரிய யானையையெல்லாம் காலி பண்ண போறான்’ என சொல்லி ஆச்சர்யப்பட்டான். அதன்பின் வைரமுத்துவை உள்ளே வர சொல்லி முழுப்பாடலும் உருவானது. ஆனால், இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தபின் பலமுறை முயற்சி செய்தும் இருவரையும் என்னால் சேர்க்க முடியவில்லை’ என சொல்லியிருக்கிறார் பாரதிராஜா.

Next Story