Categories: latest news

வாலிக்கு வாய்ப்பு கொடுக்காதே… எம்எஸ்வியிடம் கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள்… இதெல்லாம் நியாயமா?

தமிழ்த்திரை உலகில் கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். காதல் பாடல்களாக இருந்தாலும் சரி. தத்துவப் பாடல்களாக இருந்தாலும் சரி. அவரை மிஞ்சி யாரும் எழுதி விட முடியாது. அதே நேரம் வாலிபக்கவிஞராக உருவெடுத்தவர் வாலி.

இவர் எழுதிய வேகத்தைப் பார்த்து கண்ணதாசனே கதிகலங்கி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப் போனால் கண்ணதாசனின் பாடலால் ஈர்க்கப்பட்டு சினிமா உலகில் போராடி ஒரு உச்சத்தைத் தொட்டவர்தான் கவிஞர் வாலி. அவரது வாழ்க்கையின் கரடுமுரடான பக்கத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா…

இனியும் சென்னையில் இருந்தால் வேலைக்கு ஆகாது. திருச்சிக்கே போயிடலாம்னு வாலி முடிவு எடுத்த போது சென்னையிலேயே இருந்து பாடலை எழுத வைத்தது கண்ணதாசனின் பாடல்தான். ‘மயக்கமா கலக்கமா’ என்ற அந்தப் பாடலைக் கேட்டதும் வாலி மீண்டும் சினிமா உலகில் போராடி தனக்கென ஒரு இடம் பிடித்தார். ‘இதயத்தில் நீ’ என்ற படத்தில் வாலி பாடல் எழுதியதும் அவருக்கு வரிசையாகப் பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.

அப்போது அவர் பிரபலமான பாடல் ஆசிரியராக உருவெடுத்தார். எம்எஸ்வி. இசையில் காலையில் கண்ணதாசன் ஒரு பாடல் எழுதினார் என்றால், மதியம் வாலி ஒரு பாடல் எழுதுவார். இப்படி சென்று கொண்டு இருந்தது அந்தக் காலகட்டம்.

அந்த நேரத்தில் ‘நீ யாருக்கு வேணாலும் வாய்ப்புகள் கொடுத்து பெரிய ஆளாக்கு. ஆனா வாலிக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்காதே’ என கண்ணதாசன் எம்எஸ்வியிடம் சொன்னாராம். அதற்கு அவரும் ஆச்சரியமாக ‘ஏன் அண்ணே’ என்று வெகுளித்தனமாகக் கேட்டாராம். அப்போது கண்ணதாசன் சொன்ன பதில்தான் ஹைலைட்.

மற்றவரை நீ என்கரேஜ் பண்ணினா பரவாயில்லை. நிச்சயமா அவங்க போட்டியா வர மாட்டாங்க. ஆனா வாலி அப்படி இல்ல. விஷயம் தெரிஞ்சவன். நிச்சயமா எனக்கு ஒருநாள் போட்டியா அவன் வருவான் என்று எம்எஸ்வி.யிடம் சொன்னாராம் கண்ணதாசன். கண்ணதாசனுக்கு குழந்தை மனசுன்னு சொல்வாங்க. அதுக்கு உதாரணம்தான் இந்த சம்பவம். எந்தளவுக்கு வெகுளியா இருந்து இருந்தா இப்படி சொல்லிருப்பாரு கண்ணதாசன் என நம்மால் உணர முடிகிறது.

Published by
sankaran v