Categories: latest news

Flash back: கவிஞர் சொன்னதைக் கேட்டு கடும் கோபம் கொண்ட எம்ஜிஆர்… காட்சியை மாற்றச் சொன்னா ஆளையா மாற்றுவாரு?

மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று குதிரையில் அமர்ந்தபடி பாட்டுப் பாடிக்கொண்டே வருவார். இந்தப் பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ். வாங்க மச்சான் வாங்க, மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ ஆகிய ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். இன்றும் திருமண வீட்டில் ஒலிக்கும் புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே பாடலையும் எழுதியவர் இவர்தான்.

இவர் பாடலாசிரியர் மட்டும் அல்ல. கதாசிரியரும் கூட. சினிமாவில் மட்டும் அல்ல. பல நாடகக்குழுக்களுக்கும் நாடகங்கள் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த சமயம் தஞ்சை ராமையதாஸிடம் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா எம்ஜிஆரை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறேன். உங்களிடம் கதை இருக்கிறதா என கேட்டுள்ளார்.

பகடை பன்னிரெண்டு என ஒரு கதையை நாடகத்திற்காக எழுதி இருந்தார். அப்போது திரைப்படத்திற்காக அந்தக் கதையைக் கொஞ்சம் மாற்றி எழுத அதுவே குலேபகாவலி என்ற படமானது. அப்போது ஏற்பட்ட நட்பில் எம்ஜிஆரை வைத்து லலிதாங்கி என்ற படத்தைத் தயாரித்தார். 1935ல் வெளியான லலிதாங்கி படத்தின் ரீமேக்தான் இது.

10ஆயிரம் அடி வரை வளர்ந்த இந்தப் படத்தில் திடீரென சிக்கல் ஏற்பட்டது. ஒரு காட்சியில் கடவுளை துதி பாடும் வகையில் எம்ஜிஆர் பாடல் ஒன்று இருந்தது. அப்போதுதான் எம்ஜிஆர் திமுகவில் இணைந்து இருந்தார். அதனால் ‘கட்சிக் கொள்கைக்கு எதிராக நான் கடவுளை துதிபாடும் வகையில் நடிக்க மாட்டேன்’ என்றார். ‘நீங்கள் காட்சியையும், பாடலையும் மாற்றுங்கள்’ என்றார்.

ஆனால் இதற்கு தஞ்சை ராமையாதாஸ் சம்மதிக்கவில்லை. அதற்குப் பதிலாக ஹீரோ எம்ஜிஆரையே

படத்தில் இருந்து தூக்கிவிட்டார். அவருக்குப் பதிலாக சிவாஜியை வைத்து ராணி லலிதாங்கி என்ற பெயரில் படமாக்கினார். அது 1957ல் வெளியானது. இதே போல அறிவாளி என்ற படத்தில் முதலில் எம்ஜிஆர் நடிக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதற்குப் பதிலாக சிவாஜி நடிப்பில் வெளியானது.

Published by
sankaran v