Actor Vijay: டீன் ஏஜிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என விஜய் ஆசைப்பட்டார். ஆனால், அவரின் அப்பா மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அதில் விருப்பம் இல்லை. சினிமா கஷ்டம்.. உன்னால் முடியாது என அவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் விஜய் கேட்கவில்லை. மகனை வைத்து படமெடுக்க வேறு தயாரிப்பாளர்கள் வரமாட்டார்கள் என்பதால் அவரே சொந்த காசு போட்டு விஜயை அறிமுகம் செய்து வைக்க முடிவெடுத்தார்.

அப்படி விஜய் அறிமுகமான திரைப்படம்தான் நாளைய தீர்ப்பு. 1992ம் வருடம் ரிலீஸான இப்படம் வெற்றி பெறவில்லை. எனவே, மீண்டும் விஜயை வைத்து ரசிகன், தேவா, விஷ்ணு உள்ளிட்ட சில படங்களை இயக்கினார் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால், பெரிதாக எடுபடவில்லை. அதன்பின் பூவே உனக்காக படத்தால் விஜயின் வாழ்க்கை மாறியது. இந்த படத்தின் வெற்றி மற்ற தயாரிப்பாளர்களுக்கு விஜய் மீது நம்பிக்கையை கொண்டு வந்தது.

அதன்பின் பல படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக விஜய் மாறினார். காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், கில்லி போன்ற படங்களின் வெற்றி அவரை முன்னணி நடிகராக மாற்றியது. இப்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார்.

அதேநேரம் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கும் அவர் போய்விட்டார். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த ஜனநாயன் படப்பிடிப்பு முடிந்தநிலையில் விரைவில் முழுநேர அரசியல்வாதியாக மாறவிருக்கிறார். இந்நிலையில், விஜயை வைத்து சச்சின், துப்பாக்கி, தெறி போன்ற படங்களை தயாரித்த கலைப்புலி தாணு ஒரு நெகிழ்ச்சியான செய்தியை சொல்லியிருக்கிறார்.

நான் எத்தனையோ பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்திருக்கிறேன். எல்லா நடிகர்களையும் எனக்கு பிடிக்கும். ஆனால், என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் என்றால் அது தளபதி விஜய்தான். ஏனெனில், யாரும் சொல்லாத ஒன்றை விஜய் என்னை பற்றி சொல்லியிருக்கிரர். ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘தாணு சாரை என் அப்பாவிற்கு அடுத்த இடத்தில் வைத்திருக்கிறேன்’ என சொன்னார். அதுபோல என்னை யாரும் சொன்னது இல்லை. அதனால் அவர் எனக்கு ஸ்பெஷல்தான்’ என சொல்லியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வினியோகஸ்தராக இருந்து பெரிய தயாரிப்பாளராக மாறியவர் கலைப்புலி தாணு. விஜயகாந்த், ரஜினி, கமல் போன்ற நடிகர்களை வைத்து படங்களை தயாரித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் அதிக பட்ஜெட்டில் படமெடுக்க முன்வந்தவர் இவர்தான். விஜயை வைத்து இவர் தயாரித்த துப்பாக்கி படம் விஜய்க்கு முக்கிய படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. லைக்கா, ஏஜிஎஸ், சன் பிக்சர்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்தபின் இவர் படமெடுப்பது குறைந்து போனது குறிப்பிடத்தக்கது.

சிவா
முருகன் 10 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.