இந்த படத்தோட தமிழ் ரைட்ஸ் எனக்கு கொடுங்க!. கமலிடம் நக்கலடித்த ராதிகா!...

சிறுவனாக இருக்கும்போதே சினிமாவுக்கு வந்தவர் கமல்ஹாசன். திறமையானவர்கள் மத்தியில் இருந்ததாலும், வளர்ந்ததாலும், அவர்களின் நட்பாலும் தன்னை மெருகேற்றிக்கொண்டார் கமல். கமல்ஹாசனை ஒரு முழுநடிகராக மாற்றியது இயக்குனர் சிகரம் பாலச்சந்தர்தான். அவர்தான் எந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என கமலுக்கு சொல்லிக் கொடுத்தவர்.
கமலுக்கு எப்போதும் வழக்கமான மசாலா சினிமா பாணியிலிருந்து விலகி புதுமையான, வித்தியாசமான கதைகளை சினிமாவாக எடுக்க வேண்டும் என்கிற ஆசை உண்டு. அவர் உடல், பொருள், ஆவி என எல்லாவற்றிலும் கலந்திருப்பதே அந்த எண்ணம்தான். உலக சினிமா தரத்திற்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்ல வேண்டும் என்கிற குறிக்கோள் அவரிடம் எப்போதும் உண்டு.
அதனால்தான் பல பரிசோதனை முயற்சிகளை அவர் செய்து பார்த்துக்கொண்டே இருக்கிறார். ராஜபார்வை, குணா, மகாநதி, ஆளவந்தான், விஸ்வரூபம், ஹேராம், அன்பே சிவம் போன்ற படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தார். இதில் சில படங்கள் வியாபாரரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் கமல் தளரவில்லை.
நடிகர் ரஜினியே கமலின் படங்களுக்கு ரசிகர்தான். அவர் அடிக்கடி பார்க்கும் படம் கமல் இயக்கி நடித்து உருவாக்கிய ஹேராம். மகாத்மா காந்தி சுடப்பட்டதன் பின்னணியில் ஒரு கதையை உருவாக்கி மிகவும் சிறப்பாக இயக்கியிருந்தார் கமல். இந்த படத்தின் மேக்கிங்கை மணிரத்னம் போன்ற இயக்குனர்களே பாராட்டினார்கள்.
இந்த படத்தில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் வசனங்கள் இடம் பெற்றிருந்தது. எனவே, சாமானிய ரசிகர்களுக்கு பல காட்சிகள் புரியவில்லை. எனவே, படம் வசூல்ரீதியாக தோல்வி பெற்றது. இந்த படத்தை பார்த்த நடிகை ராதிகா கமலிடம் ‘இந்த படத்தின் தமிழ் உரிமையை எனக்கு கொடுங்கள்’ என நக்கலடித்த சம்பவமும் நடந்தது. ஆனால், ராதிகா இதை ஆச்சர்யப்பட்டு பேசியதாக பார்த்திபன் ஒரு மேடையில் பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக ஹே ராம் எப்போதும் இருக்கும். இந்த படத்தில் கமல் வைத்த விமர்சனங்கள் காலத்திற்கும் பொருந்தும். குறிப்பாக காந்தியை விமர்சிப்பவர்களுக்கு இப்படம் ஒரு பதிலாக எப்போதும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.