Flash Back: ஒரு போட்டோவில் இருந்து உருவான சிவாஜி படம்... அட அது சூப்பர்ஹிட்டாச்சே!

by SANKARAN |
sivajiganesan
X

இயக்குனர் ப.நீலகண்டனும், பி.ஆர்.பந்துலுவும் மிகச்சிறந்த நண்பர்கள். பி.ஆர்.பந்துலு தனியாக நிறுவனம் தொடங்கியபோது ப.நீலகண்டனும் அதில் பங்குதாரராக இருந்தார். ப.நீலகண்டனிடம் ம.லெட்சுமணன், சிங்கமுத்து ஆகிய இருவரும் உதவியாளர்களாக இருந்தனர். இனி தனித்தனியாக பணியாற்றலாம் என்று பிஆர்.பந்துலுவும், ப.நீலகண்டனும் முடிவு எடுத்தனர்.

அப்போது ப.நீலகண்டனிடம் ம.லெட்சுமணன் உதவியாளராக இருந்தார். பிஆர்.பந்துலுவிடம் சிங்கமுத்து உதவியாளராக இருந்தார். பிஆர்.பந்துலுவிடம் பணியாற்றவில்லை என்றாலும் ம.லெட்சுமணனுக்கு அவரோடு நல்ல நட்பு இருந்தது. அதனால் பி.ஆர்.பந்துலு என்னோட அடுத்த படத்துக்குக் கதை எழுதித் தா என்று கேட்டார்.

அவர் கேட்ட போது ம.லெட்சுமணனிடம் கதை எதுவும் தயாராக இல்லை. அப்போது அவர் ஒரு ஆங்கில நாளிதழைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அதில் ஒரு புகைப்படம் அவரை ரொம்பவே கவர்ந்தது. ஒரு யானை காலைத் தூக்கியபடி நிற்க, அதன் அருகில் 2 வயது குழந்தை கையைத் தூக்கியபடி நின்றது. அதைப் பார்த்ததும் ம.லெட்சுமணனின் மனதில் ஒரு கதை எழுந்தது.

ஒரு காட்டுல யாரோ ஒருவர் முன்விரோதம் காரணமாக ஒரு குழந்தையைக் கொண்டு வந்து போடுறாங்க. அது ஒரு ராஜகுடும்பத்துக் குழந்தையா இருந்தா எப்படி இருக்கும் என்பது தான் கதை. அந்தக் கதையை மனதில் வைத்தபடி எழுத ஆரம்பிக்கிறார். தன் மனதில் தோன்றிய அந்தக் கதையைக் குறிப்பாக எழுதிக் கொடுத்தார் ம.லெட்சுமணன்.


பிஆர்.பந்துலுவுக்கு அது ரொம்பவே பிடித்துப் போனது. இதைக் கோர்வையாக எழுதி வந்தால் நானே இதை இயக்குகிறேன் என்றார் பி.ஆர்.பந்துலு. அப்புறம் ம.லெட்சுமணன் எழுதினார். அந்தப் படம் தான் தங்கமலை ரகசியம். அது மிகப்பெரிய வெற்றிப்படமானது. அந்தப் படத்தில் சிவாஜியும், ஜமுனாவும் நடித்துள்ளனர். கற்பனைத்திறன் மட்டும் இருந்தால் ஒரு புகைப்படத்தில் இருந்து கூட ஒரு கதையை உருவாக்கலாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Next Story