எம்.எஸ்.வி பாடலை அப்படியே சுட்டு போட்ட பாட்டு!. கங்கை அமரன் ஓப்பனா சொல்லிட்டாரே!..

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என 60களில் முன்னணி நடிகர்கள் வரை கமல், ரஜினி என 80களில் பெரிய நடிகர்களாக இருந்த பலருக்கும் இசையமைத்தவர்தான் எம்.எஸ்.விஸ்வநாதன். இவருக்கு மெல்லிசை மன்னர் என்கிற பட்டமும் கிடைத்தது. பல கருப்பு வெள்ளை படங்களுக்கு அசத்தலான இசையை கொடுத்து ரசிகர்களின் மனதில் குடியேறியவர் இவர்.
பல நடிகர்களுக்கும் இவர் இசையமைத்திருந்தாலும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு இவர் இசையமைத்த பாடல்கள் எப்போதும் சாகா வரம் பெற்றவையாகவே இருக்கிறது. 60,70களில் பிறந்த பலரும் இப்போதும் அந்த பாடல்களை கேட்கிறார்கள். இவரின் இசையைத்தான் இவருக்கு பின்னால் வந்தவர்கள் காப்பி அடித்திருக்கிறார்கள்.
இப்போதுள்ள எல்லா இசையமைப்பாளர்களுக்கும் முன்னோடி இவர். எம்.எஸ்.வியின் பல பாடல்களை மேற்கோள் காட்டி பலரும் இளையராஜாவிடம் பாடல்களை வாங்கியிருக்கிறார்கள். எம்.எஸ்.வியின் பல பாடல்களுக்கு இளையராஜாவே ரசிகர். இதை அவர் பல மேடைகளிலும் சொல்லி இருக்கிறார். எம்.எஸ்.வி அண்ணாதான் என் கடவுள் எனவும் சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் ஊடகம் ஒன்றில் ஒரு முக்கிய தகவலை சொல்லியிருக்கிறார். எங்க ஊர் ராசாத்தி என்கிற படத்தில் ஒரு சூழ்நிலைக்கு பாடல் வேண்டும் என இயக்குனர் கேட்டார். என்ன மாதிரியான பாடல் என நான் கேட்க படகோட்டி படத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் பாடும் ‘பாட்டுக்கு பாட்டெடுத்தேன்’ பாடல் போல வேண்டும் என கேட்டார்.
அந்த பாடலை அப்படியே காப்பி அடித்து நான் போட்ட பாட்டுதான் ‘பொன்மானத்தேடி நானும் பூவோடு வந்தேன்’ என்கிற பாடல் என சொல்லியிருக்கிறார். இது போல பல எம்.எஸ்.வி பாடல்களை இன்ஸ்பிரேஷனாக வைத்து நானும், அண்ணனும் பல பாடல்களை உருவாக்கியுள்ளோம் என சொல்லியிருக்கிறார்.
எங்க ஊரு ராசாத்தி படத்தில் இடம் பெற்ற இந்த பாடலில் சுதாகரும், ராதிகாவும் நடித்திருப்பார்கள். 1980ம் வருடம் இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.