
அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க தொடங்கி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் இளையராஜா. 80களில் இவரின் பாடல் ஒலிக்காத குக்கிராங்கள் கூட தமிழ்நாட்டில் இல்லை. அப்போது வெளியான 90 சதவீத திரைப்படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்தார்.
இளையராஜா படத்திற்கு இசையமைக்க சம்மதித்துவிட்டால் அந்த படம் வெற்றி என்கிற நிலைதான் அப்போது இருந்தது. எனவே ஹீரோவை தேர்ந்தெடுப்பதற்கு முன்பே தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இளையராஜாவிடம் பேசி இசையமைக்க சம்மதம் வாங்கிவிடுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக இளையராஜா இருந்தார்.
இப்போதும் 70, 80களில் பிறந்தவர்ளுக்கு இளையராஜாவின் பாடல்கள்தான் ஃபேவரைட்., கார் பயணங்களில் இன்னமும் அவரின் பாடல்களைத்தான் கேட்கிறார்கள். சினிமாவில் இசையமைப்பாளராகும் ஆசையில் இளையராஜா சென்னை வந்தபோது பாடலாசிரியர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் அவருடனே வந்தவர்தான் அவரின் தம்பி கங்கை அமரன். இவரும் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர் என பல அவதாரங்களை எடுத்திருக்கிறார்..
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கங்கை அமரன் ‘நாங்க அப்போ சினிமாவில் வாசிக்கவில்லை.. லைட் மியூசிக்கில் வாசிச்சிக்கிட்டு இருந்தோம். நான் ரூம்ல ரசம் வைப்போம். அதை குடிக்கிறதுக்காகவே எஸ்.பி.பி ரூமுக்கு வருவான். என் ரசத்தை குடிச்சிட்டு சூப்பரா இருக்குடான்னு சொல்லுவான். என்னோட ரசத்த குடிச்சதனாலதான் உன் வாய்ஸ் நல்லாருக்குன்னு சொல்லுவேன்.. அதே மாதிரி இளையராஜாவுக்கு எப்படி இவ்வளவு ஞானம் வந்தது? நான் வச்ச சாம்பார், ரசத்த சாப்பிடதாலதான்’ என பேசியிருக்கிறார்.