Gangers Review: மிச்ச மீதி இருந்த மசாலாவை போட்டு கிண்டி இருக்கும் கேங்கர்ஸ்… திரை விமர்சனம் இதோ!

Gangers: சுந்தர் சி நடித்திருக்கும் கேங்கர்ஸ் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் படம் எப்படி இருக்கிறது என்ற முழு விமர்சனம் குறித்த தொகுப்புகள்.
பள்ளியில் பிடி மாஸ்டராக இருக்கிறார் வடிவேலு. அந்த பள்ளியில் வந்து சேருகிறார் சுந்தர்சி. திடீரென பள்ளியில் ஒரு மாணவி காணாமல் போகிறார். ஆசிரியராக இருக்கும் கேத்தரின் தெரசா இது குறித்து புகார் கொடுக்க விஷயம் பரபரப்பாகிறது.
அந்த ஊரில் அரசியல்வாதியாக இருக்கும் மைம் கோபி மற்றும் அருள் தாஸ் தவறான தொழில் செய்ய பள்ளியை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்காக அவர்களுக்கு சுந்தர் சி மறைந்திருந்து பிரச்சினை கொடுக்கிறார். இதற்கு பின்னால் இருப்பது வடிவேலு என மாட்டி விடுகிறார்.
இது ஒரு புறம் இருக்க இரண்டாம் பாதியில் அடுத்த வில்லனிடமிருந்து 100 கோடியை ஆட்டையை போடும் கதையும் சேர்ந்து கொள்கிறது. இதில் வடிவேலு மற்றும் சுந்தர் சி கைகோர்ந்து எப்படி படத்தை கிளைமாக்ஸ் நோக்கி அழைத்து செல்கிறார்கள் என்பதுதான் கதை.

லாஜிக்காக பார்த்தால் படத்தில் பல இடங்களில் ஓட்டை. ஆனால் காமெடிக்கு என இப்படத்தை பார்ப்பதாக இருந்தால் படம் ஓகே ரகம்தான். எப்போதும் போல இந்த கூட்டணி அப்ளாஸ் வாங்கி இருக்கிறது. தலைநகரம் படத்துக்கு பின்னர் இருவர் காம்போவில் காமெடி கலைக்கட்டுகிறது.
காமெடி என்ற ஒற்றை வார்த்தையால் படத்தை மொத்தமாக தூக்கி சென்று இருக்கிறார் சுந்தர் சி. ஆனால் திரைக்கதை பல இடங்களில் சலிப்பை தட்டுகிறது. வடிவேலுவை தூக்கி நிறுத்த தேவையில்லாத நிறைய கேரக்டர்கள் படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது.
எப்போதும் போல ஹீரோயின்கள் பேருக்கு என இரண்டு சீன்களுடன் வந்து சென்றிருக்கின்றனர். பொதுவாக சுந்தர் சி யின் படங்களில் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெறும். ஆனால் அதிலும் கேங்கர்ஸ் சொதப்பி இருக்கிறது.
அக்மார்க் பழைய வடிவேலுவை பார்க்க ஆசைப்படும் ரசிகர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக கைகொடுக்கும். ஆனால் கதை என தியேட்டருக்கு செல்பவர்களுக்கு உத்திரவாதம் இல்லை. மிச்சமீதி இருந்த மத கஜ ராஜா மசாலாவை கலந்துவிட்டு படத்தை முடித்து இருக்கிறார் சுந்தர் சி.